பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 8.pdf/67

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மாணிக்கவாசகர்

55



ஆனால் உண்மையில் யார் சதுரப்பாடு உடையவர்? இறைவனா? மாணிக்கவாசகரா? மாணிக்கவாசகர் என்ற ஓர் ஆன்மாவை ஆட்கொண்டருள இறைவன், குதிரைச் சேவகனாகி, பிட்டுக்கு மண் சுமந்து, கொற்றாளாக வேலை செய்து, கூலி கொண்டு, மொத்துண்டு, புண் சுமந்து அவதிப்பட நேரிட்டிருக்கிறது. எண்ணற்ற உயிர்க் குலத்தை உய்யுமாறு ஆட்கொள்ள எத்தனை தடவை அவன் மண் சுமப்பது? அடிபடுவது? இந்த நடைமுறை தொடர்ந்து சாத்தியமன்று; மாணிக்கவாசகரின் புண் சுமந்த பாடலைப் பரிசாகப் பெற்ற நாள் முதல் திருவாசகம் ஓதியே அனைவரும் இறைவனின் திருவருளைப் பெறலாம்; இன்ப அன்பினை எய்தலாம்.

அறிவால் சிவனேயாய மாணிக்கவாசகர் அருளிச் செய்த திருவாசகமே உயிர்களுக்கு-மானுடத்திற்கு ஈடிலாப் பதங்கள் யாவையும் கடந்த இன்பத்தை வழங்கும்.

ஆதலால் மானுடத்தை ஆட்கொள்ள மண் சுமக்க வேண்டிய அவசியத்திலிருந்து இறைவனுக்கு விடுதலை கிடைத்தது. மேலும் இறைவனுக்கு, கடையூழியில் தனிமை கழிக்கத் துணையாகத் திருவாசகம் கிடைத்தது.

மாணிக்கவாசகரைப்போல் பலர் இறைவன் அருளைப் பெற்றுள்ளனர். ஆனால், இறைவன் தானே படியெடுத்துச் சுமந்து செல்லக்கூடிய திருவாசகத்தைப் பெற்றது மாணிக்கவாசகரிடத்தில் தான்! எனவே, இறைவனே சதுரப்பாடுடையவன்!

“தந்ததுன் தன்னைக் கொண்டதென் தன்னைச்
சங்கரா ஆர்கொலோ சதுரர்
அந்தமொன் றில்லா ஆனந்தம் பெற்றேன்
யாது நீ பெற்ற தொன் றென்பால்
சிந்தையே கோயில் கொண்ட எம் பெருமான்
திருப் பெருந் துறையுறை சிவனே