மாணிக்கவாசகர்
57
திருக்கோவையார்
மாணிக்கவாசகர் திருக்கோவையாரையும் அருளிச் செய்தார். “பாவை பாடிய வாயால் கோவை பாடுக” என்ற திருக்குறிப்பின் வழி பாடியதாக வரலாறு.
இறைவனை, ஆடல்வல்லானைத் தில்லையம்பலத்துள் காணலாம்; அங்கு, காண இயலாது போனால், மதுரையின் கண் ஆய்ந்த தமிழ்த்துறையில் காணலாம்; அங்கும் காண இயலாது போயின் ஏழிசைச் சூழலில் காணலாம் என்று திருக்கோவையார் பேசுகிறது.
தில்லையம்பலமும் தமிழ்த்துறையும் ஏழிசைச் சூழலும் மாணிக்கவாசகர் சிந்தையும் ஒன்றேயாம். அதனால்தான், திருவாசகத்தை இறைவன் படியெடுத்தான். தில்லையில் மாணிக்கவாசகரை, திருவாசகத்தின் பொருள் கேட்கின்றனர். மாணிக்கவாசகர் ஆடல்வல்லானையே பொருளாகக் காட்டி அருள்கின்றார்.
திருவாசகம் ஓதுவோம்
திருவாசகம் பண் சுமந்த பாடல்! இறைவனை முன்னிலைப்படுத்திப் பாடப்பெற்ற பாடல்கள் திருவாசகத்தில் மிகுதி! உயிரின் சிறுமையும் இறைவனின் பெருமையும் பேசப்படுவதால் உருக்கம் மிகுதி! ஊனினை, உயிரினை உருக்கும் பாடல்கள்!
டாக்டர் ஜி.யூ. போப் “என்பினை உருக்கும் பாடல்கள்” என்றார். அழுது அடி அடையும் நெறி, திருவாசக நெறி! திருவாசக நெறி, அன்பு நெறி! பொதுமை நெறி!
திருவாசகம் ஓதுவோம்! மனநலம் அடைவோம்.
கு.இ.VIII.5.