பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 8.pdf/79

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருவாசகத் தேன்

67


என்பார் அருணகிரிநாதர். மனம் மாண்டுபோனால்தான் ஆன்மாவிற்குச் செயலாற்ற இயலா நிலை உருவாகும். அதுமட்டுமல்ல. மாந்தர் வினை - தொழில் செய்தால்தான் உலகம் வளரும்; வாழும் உயிர்க்குலமும் வாழ இயலும். வினை செய்தல் கோட்பாடு மாந்தருக்குத் தவிர்க்க முடியாத தேவை. வையகம் இயங்க - வாழ மாந்தர்தம் செயலே மூச்சு; உயிர்!

ஆதலால், மாந்தர் வினை செய்தல் இயற்கை ஆக்கமும் கூட! இங்ஙனம் நல்லனவே பயப்பது வினை. சமய உலகில் வினையின் எதிர்விளைவைப் பற்றி மட்டுமே எடுத்துக் கூறினார்கள்; கூறிவருகிறார்கள். வினையின் விளைவு மக்களுக்குப் பொருளாக்கம்; மக்களுக்கு வாழ்வு. சமய உலகமும் வினை செய்தலை வேண்டாம் என்று ஒரு பொழுதும் கூறியதில்லை; கூற இயலாது. இறைவனே ஐந்தொழில் செய்கிறான். சமய உலகமும் தொண்டு செய்யுமாறு பணிக்கிறது. திருத்தொண்டு செய்யுமாறு உணர்த்துகிறது. சிந்தனை, சொல், தொண்டு எல்லாமே வினைதான்! புலன்களால், பொறிகளால் வரும் செயலாக்கங்களைவிட, சிந்தனையால் வரும் வினையாக்கம் கூடுதல் என்பதே உண்மை. மாணிக்கவாசகரே கூடச் செயல் செய்தவர் தானே! திருக்கோயில் கட்டியவர்தானே! அது ஒரு வினை தானே! ஆதலால் வினை இயற்றல் இயற்கை. வினை செய்யும்பொழுது கொள்ளும் மனப்பாங்குதான் முக்கியம். வினையை - தொழிலைச் செய்யும்பொழுது எத்தகைய மனப்பாங்குடன் செய்கிறோம் என்பதே கேள்வி! செய்யும் வினையைவிட, தொழிலைவிட மனப்பாங்கே விளைவுகள், எதிர்விளைவுகளுக்குக் காரணமாக அமைகின்றன. அல்லது விளைவுகளே இல்லாமலும் போகின்றன. வினைகளின் செயற்பாடுகள் மனம், மொழி, மெய்யால் அமைகின்றன. மனம் விரும்பியும் விரும்பாமலும் செய்யும் வினைகளுக்கும் பயன் உண்டு. மனம் விரும்பிச் செய்கின்ற வினைகள்