18
குமண வள்ளல்
“நீங்கள் இதற்குமுன் இங்கே வந்ததே இல்லையே!” என்றான் குமணன்.
“என் ஊழ்வினை தடுத்து நின்றது. நல்ல காலம் பிறவாமல் இருந்தது. இப்போதுதான் திருவருள் கூட்டுவித்தது. நான் வந்ததிலிருந்து இங்கே கிடைக்கும் நலன்களை எண்ணி எண்ணி இன்புறுகிறேன். குழந்தையைக் கண்ட தாய்க்கு அதன் வயிற்றின் வாட்டந்தான் முதலில் கண்ணில் படும். அப்படி இங்கே உள்ளவர்கள் என் பசியறிந்து உணவிட்டுத் தூங்க வைத்தார்கள்.”
“புலவர்களுக்கு உபசாரம் செய்வதைக் காட்டிலும் பெரிய கடமை இங்கே யாருக்கும் இல்லை. இது என்ன சிறப்பான உபசாரம்? தமிழ் நாட்டில் புலவர்களுக்கு உள்ள மதிப்பை நான் ஓரளவு அறிந்திருக்கிறேன். அவர்களைத் தக்கபடி உபசரித்து அளவளாவ நான் என்ன பாரியா? காரியா?"
அரசன் இப்படிச் சொன்னபோது புலவருக்கு இன்பக் கிளுகிளுப்பு உண்டாயிற்று. அவர் பாரி முதலிய வள்ளல்களைப்பற்றித் தாம் கூற இருக்கும் பாட்டிலே சொல்லியிருந்தார். குமணனே அதற்குத் தோற்றுவாய் செய்துவிட்டான்,
அவர் பேசத் தொடங்கினர்: “அரசர் பெருமானே, நானும் பாரியையும் காரியையும் நினைத்தேன். தாங்கள் அவர்களைப்பற்றிச் சொன்னீர்கள். பாரி முதலிய ஏழு வள்ளல்களைப்பற்றித் தமிழ்நாடு நன்கு அறியும். அவருள் ஒருவனாகிய அதிகமானை நான் ஒருமுறை பார்த்துப் பழகியிருக்கிறேன். பாரி, புலவர்களுக்குக் கணக்கு இல்லாமல் வாரி வழங்கின பெரு வள்ளல் என்பது உண்மைதான். முடியுடை யரசர்கள்