பக்கம்:கும்மந்தான் கான்சாகிபு.pdf/26

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

18

வாங்கிக் களக்காட்டுச் சீமையைப் பரிசாகப் பெறுவதே எங்கள் நோக்கம்,’ என்பதைச் சடுதியில் புலப்படுத்தி விட்டனர். கான் சாகிபும் கடைத் தேங்காயை எடுத்து வழிப் பிள்ளையாருக்கு உடைத்தது போல், களக்காட்டுச் சீமையைத் திருவாங்கூராருக்குத் தாரை வார்த்துத் தந்தான். அதன் பயனாகத் திருவாங்கூராரின் படைப்பலத்தையும், தூத்துக்குடி, அஞ்சங்கோ முதலிய இடங்களில் இருந்து வந்த பீரங்கிகளையும் துணையாகக் கொண்டு, 1759 டிசம்பர் 4-ஆம் தேதி பூலித் தேவரின் பலம் பொருந்திய கோட்டைகளில் ஒன்றாகிய வாசுதேவ நல்லூரைக் கடுமையாகத் தாக்கினான் கான் சாகிபு.

சாவைக் கண்டு சிரிக்கும் சுதந்திர வீரர்களைக் கொண்ட வாசுதேவ நல்லூர்க் கோட்டை தாக்கப் பெற்றது பற்றிக் கான் சாகிபின் சிறப்புக்களை ஒன்று விடாமல் ஆராய்ந்து சொல்வதையே ஆராய்ச்சி அறிவின் பயனைப் பெற்றதாகக் கருதி, 320 பக்கங்களில் நூல் எழுதியுள்ள அறிஞர் ஹில் சொல்வதைப் படிப்போம்:- ‘கான் சாகிபிடம் பெரும் படை இருந்தாலும், அந்த நகரின் அமைப்பு, அவன் முகாமை வீர மறவர்கள் அடுத்தடுத்துத் தாக்குவதற்கு ஏற்றாற் போல் அமைந்திருந்தது. மேலும் கோட்டைக்குள் இருந்தவர்கள் அரும் பெரும் வீரர்கள். கான் சாகிபிடம் இருந்த ஒரு பெரும் பீரங்கியும், அது ஏற்றப்பட்ட மறு நாளே வெடித்து விட்டது. என்றாலும், கோட்டையைத் தாக்கக் கான் சாகிபு முடிவு செய்தான். அவன்