பக்கம்:கும்மந்தான் கான்சாகிபு.pdf/29

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

21

என அறிந்தான். பற்களை நற நறவென்று கடித்தான். என்ன பயன்? அத்தனை நாளும் பாம்புக்கு அல்லவோ பால் வார்த்தான் கான் சாகிபு! எந்தத் திருவாங்கூர் மன்னனுக்குக் களக்காட்டைக் காட்டிப் பூலித் தேவரையும், அவர் தோழர்களையும் தாக்கச் செய்தானோ, அதே திருவாங்கூர் மன்னன் கான் சாகிபு ஆர்க்காட்டு நவாபின் பிடியிலிருந்தும், கும்பினியின் பிடியிலிருந்தும் விடுதலை பெற ஆசை கொண்டிருக்கும் செய்தியைக் கண்ணும் மூக்கும் வைத்துக் கும்பினியின் காதுகளில் ஓதினான். செய்தி அறிந்த கான் சாகிபு பெரும்படை கொண்டு திருவாங்கூரை மோதப் புறப்பட்டான்; கும்பினி தடுத்தது. ஆனால் உத்தரவைப் புறக்கணித்துக் கான் சாகிபு போர்க் கோலம் பூண்டான். அவ்வமயம் மார்ச்சந் என்ற பிரெஞ்சுத் தளபதி கான் சாகிபுக்குத் துணையாக வந்து சேர்ந்தான்; அதனை அறிந்து நடுங்கிப் போனான் திருவாங்கூர் மன்னன். கொள்கை, குறிக்கோள் எதுவும் இல்லாத அவன், கான் சாகிபு தந்த பரிசுகளைப் பெற்றுக் கொண்டு, சமாதானப் பத்திரத்தில் கையெழுத்திட்டு விட்டு, நச்சரவெனத் தன் அரண்மனைக்குள் நுழைந்து கொண்டான்.

கான் சாகியின் கண்கள் ‘யாரெல்லாம் ஆர்க்காட்டு நவாபின்— கும்பெனியின்—பகைவர்கள்?’ என்று சுழன்று, சுழன்று நாலு திசைகளிலும் பார்த்தன. அவன் படைத்திருந்த சுடுகாடே அவனைப் பார்த்துச் சிரித்தது; அழைத்தது. கான் சாகி-