பக்கம்:கும்மந்தான் கான்சாகிபு.pdf/9

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
 

கும்மந்தான் கான்சாகிபு

நெல்லூர்ச் சுபேதார், ஈசப், யூசப், யூசப் கான், மகம்மது யூசப், கான் சாகிப், கும்மந்தான் என்று பலவேறு பெயர்களால் சுட்டப் பெறும் கும்மந்தான் கான் சாகிப் இராமநாதபுரத்துப் பனையூரில் இந்து வேளாளனாகப் பிறந்து, ‘மருதநாயகம் பிள்ளை’ என்ற பெயரைக் கொண்டிருந்தவன் என்று செவி வழிச் செய்திகள் கூறுகின்றன. இவன் இளைஞனாய் இருந்த பொழுதே பெற்றோருக்கு அடங்காப் பிள்ளையாய் இருந்தான். வீட்டை விட்டு ஓடி, இஸ்லாமிய சமயத்தைத் தழுவி, ‘முகம்மது யூசப்’ என்ற பெயர் தாங்கிப் புதுச்சேரிக்குப் போய்ச் சேர்ந்தான். அங்கே ஒரு படகோட்டியாகவும், தையல்காரனாகவும் இருந்தான் என்றும், ஓர் ஐரோப்பியனிடம் பணியாளனாய் அமர்ந்தான் என்றும், பெருந் தவறு ஒன்று செய்ததால், அவனிடமிருந்து விரட்டப்பட்டான் என்றும் கதைகள் கூறுகின்றன. இவை எந்த அளவுக்கு மெய்யானவை என்பது விளங்கவில்லை. ஆனால் புதுவையில் இருந்த போது, மார்ச்சந் என்ற ஒருவனோடு நட்புக் கொண்டான் என்பதும், அவன் நட்பே பிற்காலத்தில் அவன் நாசத்துக்குக் காரணமாயிற்று என்றும் கூறப்படும் செய்திகள் நம்பத்தக்கனவே.