பக்கம்:குருகுலப் போராட்டம்.pdf/62

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

60

குருகுலப் போராட்டம்

இந்த நிலையில் நாம் எல்லோரும் டாக்டர் நாயுடுவை ஆதரிக்க வேண்டும். அவருடைய தலைமையில் நம்பிக்கை வைக்க வேண்டும். எனவே திரு எஸ். இராமநாதனுடைய திருத்தத்துடன் நாம் இந்தத் தீர்மானத்தை ஆதரிப்போம். என்றார். வந்திருந்த 26 பேரில் 19 பேர் ஆதரித்தார்கள். 7 பேர் எதிர்த்தார்கள்.

கூட்டத்திற்குக் கூட்டம் சாதி வேற்றுமையை ஒழிப்போம் என்று பேசிய பெரும் புள்ளிகள், நான்குபேர், கூட்டம் முடிந்தவுடனே செயற்குழுவிலிந்து விலகுவதாகக் கடிதம் கொடுத்தார்கள். நான்குபேரும் பார்ப்பனத் தலைவர்கள்.

1. சி. இராஜகோபாலாச்சாரியார்

2. டாக்டர் டி.எஸ்.எஸ் ராஜன்

3. கே. சந்தானம்

4. டாக்டர் டி.வி. சுவாமிநாதன்.

இந்த நான்குபேரும் காந்தியடிகளின் நம்பிக்கைக்குப் பாத்திரமானவர்கள், தாங்களே காந்தியின் வாரிசுகள் என்று காட்டிக் கொள்பவர்கள்.

இவர்கள் குருகுலப் பிரச்சினையில் வ.வே.சு. ஐயர் செய்த செயல் தவறு என்று சொல்வதற்குப் பதில் - தவற்றைத் திருத்திக் கொள்ள வேண்டும் என்று அவரைத் திருத்துவதற்குப் பதில், அவரைத் தாங்கிப் பிடித்தார்கள். அவருடைய தவறே நேரானது என்று வாதிடத் தயங்கவில்லை.