5
நா.பார்த்தசாரதி }
நிலையாமையைப் பற்றிய ஒரு செய்யுள் வரியை அப்பா அடிக்கடி சொல்லுவார். அந்தச் செய்யுள் வரி மாதிரிதான் அப்பாவும் கல்லுரிக்குப் போனார். புத்தக அலமாரிக்கு அருகில் நின்றார். இருந்தார், திடீரென்று எல்லோரையும் தவிக்க விட்டுப் போய் விட்டார்.
மரணத்தைக்கூட ஆர்ப்பாட்டமில்லாமல், நோய் நொடி தொல்லைகள் இல்லாமல் எவ்வளவு எளிமையாக அடைய முடிந்தது அவரால் செத்துப் போவது போலவா அவர் போனார்? யாரோ எங்கோ இரகசியமாகக் கூப்பிட்டு அனுப்பியதற்காகப் புறப்பட்டுப் போவது போலல்லவா போய் விட்டார்.
சாயங்காலம் கோயிலுக்குப் போய்விட்டு வந்தவர் ஒரு நாளுமில்லாத வழக்கமாகக் சோர்ந்து போனவர் போல் கட்டிலில் போய்ப் படுத்துக் கொண்டார். நான் பதறிப் போய் அருகில் சென்று, 'என்னப்பா உங்களுக்கு? ஒரு மாதிரிச் சோர்ந்து காணப்படுகிறீர்களே?' என்று கேட்டேன்.
'ஒன்று மில்லை பூரணி, கொஞ்சம் வெந்நீரில் சுக்கைத் தட்டிப் போட்டுக் கொண்டுவா. இலேசாக நெஞ்சை வலிக்கிற மாதிரி இருக்கிறது" என்று சிரித்துக்கொண்டே சொன்னார்.
நான் வெந்நீர் கொண்டு வரப் போனேன். தம்பி திருநாவுக்கரசு கூடத்தில் உட்கார்ந்து பள்ளிக்கூடத்துப் பாடம் படித்துக் கொண்டிருந்தான். சின்னத்தம்பி சம்பந்தனும் குழந்தை மங்கையர்க்கரசியும் வீட்டு வாயிலுக்கு முன்னால் தெருவில் விளையாடிக் கொண்டிருந்தார்கள்,
நான் வெந்நீரில் சுக்கைத் தட்டிப் போட்டுக் கொண்டிருந்த போது 'திருநாவுக்கரசு இருந்தால் இங்கே வரச் சொல், அம்மா!' என்று அப்பா கட்டிலிலிருந்தவாறே குரல் கொடுத்தார்.
அதைக் கேட்டு, 'இதோ வந்து விட்டேன், அப்பா!' என்று தம்பி கூடத்திலிருந்து சென்றான்.
அப்பா தம்பியிடம் திருவாசகத்தை எடுத்துத் தமக்குப் பக்கத் தில் உட்கார்ந்து படிக்குமாறு கூறியதும், தம்பி படிக்கத்