குழந்தையின் முதல் பாஷை அழுகை. உலகத்தின் ஸ்பசிரம் பட்ட மாத்திரத்தில் அது பிரநிருதியோடு முதல் முதலில் வாய் திறந்து பேசும் பாஷை அழுகைதான். பசித்தாலும் இசித்தாலும், அடித்தாலும் அணைத்தாலும் குழந்தையின் அழுகைதான் உணர்ச்சியின் வெளியீடாக வருகிறது.
அழும் குழந்தையின் உள்ளத்தை அறிபவர் யார் ? சில சமயம் குழந்தை அழும்பொழுது தாய்க்கு அதன் பொருள் தெரிகிறது. “இந்த நேரத்திற்கு இது அழுகிறது பாலுக்குத்தான்” என்பதை அவள் உணர்கிறாள். பாலை ஊட்டுகிறாள். குழந்தையின் அழுகையைக் கேட்கும் தாய் உடனே அதற்கு வேண்டியது பால் என்று உணர்ந்து ஊட்டும் அன்பு இணையற்றது; இறைவன் திருவருளுக்குச் சமானமாகச் சொல்லக்கூடியது. மாணிக்கவாசகர் திருவாசகத்தில் இறைவன் திருவருளே நினைக்கும்போது தாயின் “பால் நினைந்தூட்டும் பண்பையும் நினைத்துப் பார்க்கிறார்.
- “பால்நினைத் தூட்டும் தாயினும் சாலப்
- பரிந்து நீ பாவியே னுடைய, ஊனினை உருக்கி”
என்று இறைவனது திருவருளைப் பாராட்டுகிறார்.
பால் குடித்த பிறகும் குழந்தை அழுகிறது. அதன் உடம்பில் வலியோ சோர்வோ உண்டாகியிருக்கும். உடனே தாய் குழந்தையை அணைத்து முத்தமிட்டுத் தொட்டிலில் விடுகிறாள். குழந்தை அழுகையை நிறுத்துவதில்லை. மெல்ல ஆட்டுகிறாள். அப்பொழுதும் அழுகை ஒய்வதில்லை. தன்னுடைய வாயைத் திறந்து, “ஆராரோ