பக்கம்:குழந்தை செல்வம்.pdf/52

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது


39. நாஞ்சில் நாடு

[நாஞ்சில் நாடு தென்திருவாங்கூரில் ஒரு சிறு பகுதி. பண்டை நாளில் சேர, சோழ, பாண்டிய அரசர்கள் நிரந்தரமாகப் போராடுதற்கு இவ்வளநாடு இடமாயிருந்ததாம். தெற்கும் மேற்கும் குமரிக் கடலையும் வடக்கும் கிழக்கும் பொதிகைமாமலையின் கிளைகளையும் எல்லையாகப் பெற்றிருக்கும் இந்நாடு நீர்வளம் செறிந்ததாகும்.]

மாமதில் போலமலை சூழும் நாடு - வானம்
     மாதமும் மாரி பொழியும் நாடு;
பூமக ளின்முக மாகும் நாடு - சேரர்
     பொன்முடி சூடிப் புரக்கும் நாடு. 1

பாண்டியர் வந்தனை செய்த நாடு - சோழர்
     பண்டு முடிதரித் தாண்ட நாடு;
வேண்டு பொருள்கள் விளையும் நாடு - சோலை
     வேலியாய்ச் சூழ்ந்தணி செய்யும் நாடு. 2

நெஞ்சில் மிகுந்த கருணையெல்லாம் இங்கு
     நீராக மாறி நிறைந்திடவே
வஞ்சிமன் கட்டிய பேய்ச்சிப்பாறை-ஏரி
     வற்றாது பாயும் வளநாடு. 3

ஆயிரங் காலால் நடந்து நடந்தமுது
    அன்னை பழையா றளிக்கும் நாடு ;
தீய்வு கரிவறி யாத நாடு - நித்தம்
    செல்வம் பொழியும் திருநாடு. 4

பண்ணை பெருத்த பழநாடு - சுற்றிப்
    பார்த்திடக் கண்கள் குளிரும் நாடு;
மண்ணையும் பொன்னாக மாற்றும் நாடு - கவி
    வாணர் புகழும் தமிழ்நாடு. 5