பக்கம்:குழந்தை செல்வம்.pdf/66

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது


53. மகாத்மா காந்தியடிகள்

                        வெண்பா

சத்தியத்தால் மன் அரிச் சந்திரனைத் தண்ணருளால்
புத்தபெரு மானையொத்த புண்ணியனை - உத்தமனாம்
அந்தணனைக் காந்தி அடிகளை அன்போடு
சிந்தனைசெய் நெஞ்சே தினம். 1

                வேறு

மெய்யே நெஞ்சில் நாடிடுவார்.
      விஞ்சும் பொறுமை போற்றிடுவார்.
வையம் மகிழ அருள் நெறியில்
      வாழ்வு கண்டு வாழ்ந்திடுவார்,
தெய்வம் தொழுவார், நடுநீதி
     திறம்பா தென்றும் காத்திடுவார்
ஐயமின்றிக் காந்தி மகான்
     அன்ப ராவார் அறிவீரே. 2

54. ஒற்றுமை

ஒற்றுமையாக உழைத்திடுவோம் - நாட்டில்
     உற்ற துணைவராய் வாழ்ந்திடுவோம்;
வெற்றுரை பேசித் திரிய வேண்டாம் - இன்னும்
     வீணாய்ப் புராணம் விரிக்கவேண்டாம். 1

சாதி இரண்டலால் வேறுளதோ?-ஒளவைத்
     தாயின் உரையும் மறந்தீரோ?
ஆதி இறைவன் வகுத்ததுவோ?-மக்கள்
     ஆக்கிய கற்பனை தான் இதுவோ? 2