பக்கம்:கெடிலக் கரை நாகரிகம்.pdf/101

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



9. இலக்கியத்தில் கெடிலம்

பாடல்பெற்ற கெடிலம்

ஒருவரோ, ஒர் இடமோ ஒரு பொருளோ அல்லது ஒரு நிகழ்ச்சியோ மக்களது பேச்சில் மட்டுமின்றி ஏட்டிலும், இடம் பெற்றுவிடின் ஒரு தனி மதிப்புதான்! ஏட்டிலும். உரை நடையினும் செய்யுள் நடைக்குச் சிறப்பு மிகுதி, செய்யுள் நடையிலும் பழங்காலச் செய்யுட்களில் சிறப்பிடம் பெற்றிருப்பின் மிகவும் பெருமை உண்டு. இந்த அடிப்படையில் தான், நாயன்மார்கள். ஆழ்வார்களின் பாடல் பெற்ற பதிகள் மிக்க பெருமைக்கு உரியனவாய்ப் போற்றப் பெற்று வருகின்றன. ஊர்களேயன்றி ஆறுகளும் பாடல் பெற்றிருக்குமாயின் மிக்க பெருமைக்கு உரியனவே. இவ்வாறு பாடல்பெற்ற பெருமை கெடிலம் ஆற்றிற்கும் உண்டு. பழைய சங்க இலக்கியங்களில் இடம் பெறும் வாய்ப்பு கெடிலத்திற்குக் கிடைத்திராவிடினும், சங்க காலத்தையடுத்த தேவாரத்தில் இடம் பெறும் வாய்ப்பு - தேவாரப் பாடல் பெறும் பெருமை கெடிலத்திற்கு உண்டு. இனி, தேவார காலத்திலிருந்து இலக்கியத்தில் கெடிலம் இடம்பெற்றுள்ளவற்றைக் கால வரிசை முறையில் காண்பாம்.

அப்பர் தேவாரம்

அப்பர் பெருமான் திருவதிகைமேல் பதினாறு பதிகங்கள் பாடியுள்ளார். அவற்றுள் எண்பத்தாறு இடங்களில் ‘கெடிலம்’ என்னும் பெயரைக் குறிப்பிட்டுப் பாடியுள்ளார். அவருடைய பாடல் அடிகள் சில வருமாறு:

முதல் பதிகம்

"அதிகைக் கெடில வீரட்டானத்துறை அம்மானே"

இரண்டாம் பதிகம்

"கெடிலப் புனலும் உடையார் ஒருவர் தமர்நாம்"

மூன்றாம் பதிகம்

"செய்ய பொன் கிளைத்துழித் தோன்றிடும் கெடில வாணரே”
"தென்றிசைக் கெங்கைய தெனப்படும் கெடில வாணரே”