பக்கம்:கெடிலக் கரை நாகரிகம்.pdf/110

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இலக்கியத்தில் கெடிலம்

109


கரையேறவிட்ட நகர்ப் புராணம்

திருப்பாதிரிப் புலியூர்ச் சிவசிதம்பரப் புலவர் அவர்கள், தமது கரையேறவிட்ட நகர்ப் புராணத்தில் கெடிலத்தின் நீர்வளம் பற்றியும் அதனால் நடுநாடு பெற்றுள்ள நிலவளம் பற்றியும் பல இடங்களில் பாராட்டியிருப்பதன்றி, திருநாவுக்கரசரையும் சேக்கிழாரையும் பின்பற்றிக் கெடிலத்தைத் ‘தென்கங்கை’ எனப் பல இடங்களில் சிறப்பித்துக் கூறியுள்ளார்; அவற்றுள் சில இடங்கள் வருமாறு:

திருநாட்டுப் படலம்

”..........கெடிலமாந் தகைப்பேர்
மேவு தென்திசைக் கங்கையும் விரிந்து கால்கொண்டே
ஓவுறாப் பெருவளஞ் செயவொளிர் நடுநாடாம்”
(1)
விண்ணதிக் கிணையாகவே விளங்கும் ஒண்கெடிலம்
மண்ணதைத் தகைகாத்திடப் பயிரெலாம் வளர்த்தே” (9)
தலவிசேடப் படலம்
“விரைக்கடித்தண் கரையேற விட்டநக ரதுதீர்த்த
வியன்தென் கங்கை”
(1)
"தென்திசையிற் கங்கையெனத் திகழ்கெடிலப்
பூம்புனலே தீர்த்தமாமால்”
(7)
"வீறுகரை யேற்றுதல விசேடமுமற் றதன்பாலே
விளங்குங் கங்கை
ஆறெனுந் தீர்த்தக் கெடில அற்புதமும் அதற்கருகே
அமர்ந்தன் பர்க்கு ....”
(17)

இவ்வாறு இன்னும் பல இடங்களில் கெடிலத்தின் மாண்பு சிறப்பிக்கப்பட்டுள்ளது.

திருவதிகைப் புராணம்

திருவதிகை வாகீசபக்த நாவலர் தாம் இயற்றிய திருவதிகைப் புராணத்தில், கெடிலம் ஆற்றுக்கு என்றே இரண்டு படலங்கள் செலவிட்டுள்ளார்; அவை: கெடிலோற்பவப் படலம், தீர்த்த விசேடப் படலம் என்பனவாம்.