பக்கம்:கெடிலக் கரை நாகரிகம்.pdf/111

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

110

கெடிலக்கரை நாகரிகம்


இவரும் கெடிலத்தைக் கங்கையெனக் குறிப்பிட்டு, இதன் பெருமையை நாவுக்கரசரும் ஞானசம்பந்தருமே புகழ்ந்துள்ளனரென்றால் நான் எம்மட்டில் என்று கூறியுள்ளார். இதனைக் கெடிலோற்பவப் படலத்திலுள்ள

"இத்திரு நதியே கங்கை யிதிற்படிந் தவர்க ணேயச்
சுத்தமா யுறுவ ரென்று சொல்லர சறைத லோடு
முத்தராங் காழி வேந்தும் மொழிந்தன ராத லாலே
பத்தியிற் சிறிதிலா யான் பகர்வதுந் துணிபே யாமால்"

என்னும் (12) பாடலால் அறியலாம். மற்றும், சிவனது உடலிலிருந்து வியர்வை நீர்போல் வெளிவந்தது கெடிலம் என்றும், இஃது ஓர் உயிர்ப்பு உள்ள - அஃதாவது என்றும் வற்றாத (சீவ நதி) உயிர் ஆறு என்றும் இந்நூலாசிரியர் தெரிவித்துள்ளார். இதனைத் தீர்த்த விசேடப் படலத்திலுள்ள

"கூடிய காலை யாங்கு குலவிய வியர்வை நீரே
நீடிய நீத்த மாகி நின்மலக் கெடிலம் என்ன
ஓடிய திதனைச் சீவ நதி என உரைப்பர் கற்றோர்"

என்னும் (2) பாடலால் அறியலாம். இவ்வாறு பல செய்திகள் இப் புராணத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளன.

இன்னும், திருவதிகை மான்மியம், திருவதிகை உலா, திருநாவலூர்ப் புராணம், திருவாமூர்ப் புராணம், திருமாணிகுழிப் புராணம் முதலிய நூல்களில் கெடிலத்தின் ஆட்சியையும் மாட்சியையும் காணலாம்.