பக்கம்:கெடிலக் கரை நாகரிகம்.pdf/14

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



கெடிலக்கரை நாகரிகம்
1. ஆறும் நாகரிகமும்

‘ஆறில்லா ஊருக்கு அழகு பாழ்’ என்பது ஒளவை மொழி. உலகில் உள்ள ஊர்கள் எல்லாம் ஆற்றங்கரையிலேதான் உள்ளனவா? அல்ல. மற்ற ஊர்களிலும் ஆற்றங்கரை ஊர்கள் பல்வகை வாய்ப்புகள் மிகப்பெற்றவை என்பது கருத்து.

உயிர் வாழ்க்கைக்கு இன்றியமையாதனவற்றுள் நீரும் உணவும் முதன்மையானவை. நீர் இன்றி உணவுப்பொருள் இல்லை. எனவே, நீர் தாழ்ந்த நிலப் பகுதியிலே பண்டை மக்கள் நிலையாக உறைவிடம் அமைத்துத் தங்கலானார்கள். வானம் பார்த்த மண் பூமியினும் குளங்குட்டைகள் நிறைந்த பகுதி மேலானது. அதனினும், ஊற்றுக் கேணிகளும் ஏரிகளும் மிக்க பகுதிகள் முறையே மேலானவை. அவற்றினும், ஆற்றங்கரைப் பகுதிகள் மிகவும் மேலானவை. ஆற்றங்கரைப் பகுதிகளிலேயே, நெல் போன்ற உயர் பொருள்கள் விளையும் நன்செய் வயல்கள் உருவாகிப் பரந்து கிடக்கும். இந்த வயல் சார்ந்த பகுதிக்கே ‘மருதநிலம்’ என்பது பெயர்.

காடு சார்ந்த முல்லைநிலக் கொல்லைகளைவிட, மலை சார்ந்த குறிஞ்சிநிலப் புனங்களைவிட, கடல் சார்ந்த நெய்தல் நிலக் கானலைவிட, ஆற்றங்கரை சார்ந்த மருதநில நன்செய் வயல்களே மிக்க விலைமதிப் புடையவை. இதன் காரணம் அனைவருக்கும் விளங்கும்.

எனவேதான், ஆற்றங்கரைகளில் மக்கள் உறைவிடங்களை அமைத்துக் கொண்டனர். ஆங்கே நிலம் பெறமுடியாதவர்கள், வேறு இடங்களில் உறைவிடம் அமைத்துக்கொண்டு அவ்வம் மண்ணில் விளைந்தனவற்றை உண்டு வாழ்ந்து வந்தனர். வேறிடத்து மக்களினும், ஆற்றங்கரை மக்களே வாழ்க்கை வசதியிலும், கல்வி - கலைத்துறையிலும், நாகரிகத்திலும் மிக்குச் சிறந்திருந்தனர் என்பது வரலாறு கண்ட உண்மை.

மக்கள் வாழும் குடியிருப்புக்களை, தமிழில் ஊர், புரம், பேட்டை, பாளையம், பாக்கம், பட்டினம், பதி, நகர், சேரி,