பக்கம்:கெடிலக் கரை நாகரிகம்.pdf/144

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கெடிலக்கரை அரசுகள்

143


மலையமான் சோழிய ஏனாதி திருக்கண்ணன்

மலையமான் மரபைச் சேர்ந்த மன்னர் பலர், திருக்கோவலூரைத் தலைநகராகவும் முள்ளூர் மலையை அரணாகவும் கொண்டு திருமுனைப்பாடி நாட்டை ஆண்டிருப்பதாகத் தெரிகிறது. அவர்களுள் ஒருவனே மலையமான் சோழிய ஏனாதி திருக்கண்ணன் என்பவன் இவனுக்கு ‘மலையமான் சோழிய ஏனாதி திருக்கிள்ளி’ என்ற பெயரும் உண்டு. இவன் சோழ மன்னரின் படைத் தலைவனாய்ப் பணி புரிந்ததால் ‘சோழிய ஏனாதி’ என்னும் சிறப்புப் பட்டம் அளிக்கப் பெற்றதாகச் சொல்லப்படுகிறது. சங்ககாலக் குறுநில மன்னனாகிய இவனும், மலையமான் திருமுடிக்காரியைப் போலவே ஒரு வள்ளலாய்த் திகழ்ந்தான். இவனை மாறோக்கத்து நப்பசலையார் என்னும் புலவர் பெருமான் புகழ்ந்து பாடிய பாடலொன்று புறநானூற்றில் (174) காணப்படுகிறது. அதிலுள்ள சில கருத்துக்கள் வருமாறு:

சோழன் ஒருவன் நாடிழந்து பகைவர்க்கு அஞ்சி ஓடி வந்து மலையமான் திருக்கண்ணனிடம் அடைக்கலம் புகுந்தான். இவன் அவனைத் தன் முள்ளூர் மலையரணில் வைத்துக் காத்து வந்தான். தக்க சூழ்நிலை உருவாகியதும், மலையமான் சோழனைச் சோழ நாட்டிற்கு அழைத்துச் சென்று பகை களைந்து மீண்டும் அரியணையில் அமர்த்தினான். மன்னனையிழந்து மயங்கி வருந்திய சோழநாடு மகிழ்வெய்திற்று. இங்கே பாடலாசிரியர் ஓர் அழகான ஒப்புமை தந்துள்ளார்: “அரக்கர்களால் கதிரவன் மறைக்கப்பட உலகம் இருளில் ஆழ்ந்து வருந்தியபோது திருமால் கதிரவனை மீட்டு உலகிற்கு ஒளியுண்டாக்கியது போன்று, பகைவரால் சோழன் விரட்டப்படச் சோழநாடு கலங்கியபோது மலையமான் திருக்கண்ணன் மன்னனை மீட்டுக் கொணர்ந்து சோழ நாட்டை மகிழ்வித்தான்” எனப் புகழ்ந்துள்ளார் ஆசிரியர். அப் பாடலை மேலும் ஓர் உவமை அணி செய்கிறது. புலவர் திருக்கண்ணனை நோக்கி, “மழையின்றிக் கொடிய கோடையின் வெப்பம் உலகை வருத்தும்போது மிக்க மழை பெய்தாற்போல, நும் முன்னோன் விண்ணுல கடைந்ததால் நாடு துயருற்றபோது நீ மன்னனாய்த் தோன்றி நன்முறையில் நாடு காவல் புரிகின்றாய்” என்று புகழ்ந்துள்ளார். இனி, பாடலிலிருந்து சில பகுதிகள் வருமாறு:

“அணங்குடை யவுணர்...--
அருவழி யிருந்த பெருவிறல் வளவன்
மதிமருள் வெண்குடை காட்டி யக்குடை