பக்கம்:கெடிலக் கரை நாகரிகம்.pdf/16

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆறும் நாகரிகமும்

15


இவ்வாறு, முல்லை நிலத்துக் குடியிருப்பாகிய பாடி, குறிஞ்சி நிலக் குடியிருப்பாகிய குறிச்சி, நெய்தல் நிலக் குடியிருப்பாகிய பட்டினம் முதலிய எல்லா - நிலத்துக் குடியிருப்புக்களையும் குறிக்கப் பயன்படும் ‘ஊர்’ என்னும் இப் பொதுப் பெயர், பண்டைக் காலத்தில், ஆற்றங் கரையை அடுத்த - நன்செய் வயல்கள் நிறைந்த மருத நிலத்துக் குடியிருப்புக்களைக் குறிக்கவே பயன்படுத்தப்பட்டது. ஆயிரமாயிரம் ஆண்டுகட்கு முன், ‘ஊர்’ என்றால் ஆற்றங்கரை வயல் வளம்மிக்க மருதநிலக் குடியிருப்பு என்றுதான் பொருள் ஆற்றுக்கும் ஊருக்கும் உள்ள தொடர்பினை, தொல்காப்பிய - பொருளதிகார - அகத்திணையியலிலுள்ள,

[1]“தெய்வம் உணாவே மாமரம் புட்பறை
செய்தி யாழின் பகுதியொடு தொகைஇ
அவ்வகை பிறவும் கருவென் மொழிப்"

என்னும் நூற்பாவின் உரை விளக்கத்தில், உரையாசிரியர் நச்சினார்க்கினியர் வரைந்துள்ள,

“முல்லைக்கு நீர்: கான்யாறு (காட்டாறு); ஊர்: பாடியும் சேரியும் பள்ளியும். குறிஞ்சிக்கு நீர்: அருவியும் கனையும்; ஊர்: சிறுகுடியும் குறிச்சியும். மருதத்திற்கு நீர்: யாற்று நீரும் மனைக் கிணறும் பொய்கையும்; ஊர்: ஊர்கள் என்பனவேயாம். நெய்தற்கு நீர்; மணற் கிணறும் உவர்க் குழியும்; ஊர்: பட்டினமும் பாக்கமும். பாலைக்கு நீர்: அறுநீர்க் கூவலும் சுனையும்; ஊர் : பறந்தலை.”

என்னும் உரைப்பகுதி நன்கு வலியுறுத்தும். மற்ற நிலத்துக் குடியிருப்புகளுக்கெல்லாம் தனித்தனிப் பெயர்கள் குறித்துள்ள ஆசிரியர், மருதநிலத்துக் குடியிருப்புக்கு மட்டும் ‘ஊர்கள் என்பனவேயாம்’ என ‘ஊர்’ என்னும் பெயரையே குறிப்பிட் டுள்ளமை காண்க. மற்றும், ஊரைக் கொண்டுள்ள மருத நிலத்திற்கே ‘ஆற்றுநீர்’ உரியதாகக் குறிப்பிடப் பட்டுள்ளமையும் ஈண்டு இணைத்து நோக்கற்பாலது. இதனை, நாற்கவிராசநம்பி இயற்றிய ‘அகப் பொருள் விளக்கம்’ என்னும் நூலில் உள்ள,

[2]இந்திரன் ஊரன் பைந்தார் மகிழ்நன்....
பெருகிய சிறப்பின் பேரூர் மூதூர்
யாறு மனைக்கிணறு இலஞ்சி....
வருபுனள லாடல் மருதக் கருப்பொருளே"
  1. தொல் - பொருள் - அகம் - நூற்பா: 18.
  2. அகப்பொருள் விளக்கம் - அகத்திணையியல் - நூற்பா : 23.