பக்கம்:கெடிலக் கரை நாகரிகம்.pdf/165

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
13. கெடில நாட்டுப் பெருமக்கள்

வரலாற்றுக் காலந்தொட்டு இன்றுவரை கெடிலக்கரைப் பகுதிகளில் பிறந்தும் வளர்ந்தும் வாழ்ந்தும் தொடர்பு கொண்டும் புகழ்பெற்று விளங்கின. பெருமக்கள் பலராவர். சமயப்பெரியார்கள் என்ன! புலவர்கள் என்ன! கலைஞர்கள் என்ன! இப்படியாகப் பல துறைப் பெரியர்ர்கள் கெடில நாடாகிய திருமுனைப்பாடி நாட்டில் சிறந்து விளங்கினர்; இன்றும் விளங்கி வருகின்றனர்.

ஒரு நாடு நல்ல நாடா அல்லது கெட்ட நாடா என்று எதைக்கொண்டு தீர்மானிப்பது? ஒரு நாடு, தன் மாட்டுள்ள நிலவளம் - நீர்வளத்தாலோ, இயற்கைக் கணிப்பொருள் வளத்தாலோ, இன்னும் பிறவளத்தாலோ சிறந்த நாடாகக் கருதப்பட முடியாது. ஒரு நாடு மேட்டுப் பாங்காகவோ அல்லது பள்ளம் படுகுழியாகவோ இருக்கலாம்; ஒருநாடு காட்டுப் பகுதியாகவோ அல்லது கடல் சார்ந்ததாகவோ இருக்கலாம்; இன்னபிற அமைப்புக்களைக் கொண்டு நல்ல நாடு என்றோ, கெட்ட நாடு என்றோ முடிவுகட்டிவிட முடியாது. ஒரு நாட்டில் வாழும் மக்களின் தகுதியைக் கொண்டே அந் நாட்டின் தகுதியையும் வரையறுக்கமுடியும். இதனை, ஒளவையார் பாடிய


"நாடா கொன்றோ காடா கொன்றோ
அவலா கொன்றோ மிசையா கொன்றோ
எவ்வழி நல்லவர் ஆடவர்

அவ்வழி நல்ல வாழிய நிலனே'"

என்னும் புறநானூற்றுப் பாடல் (187) புலப்படுத்தும். இவ்வகையில் கெடில நாடாகிய திருமுனைப்பாடி நாட்டில் வாழ்ந்த பெருமக்கட்குக் குறைவேயில்லை. அவர்களால் அந் நாட்டிற்கு உண்டான பெருமைக்கும் அளவேயில்லை. அவர்தம் வாழ்க்கைக் குறிப்புக்கள் வருமாறு:

சமயப் பெரியார்கள்

திருமுனைப்பாடி நாட்டோடு தொடர்பு கொண்டிருந்த சமயப் பெரியார்களுள் மிகவும் புகழ்பெற்று விளங்கியவர்களின்