பக்கம்:கெடிலக் கரை நாகரிகம்.pdf/206

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கெடிலக்கரை இலக்கியங்கள்

205


“கோத்திட்டையம் கோவலும் கோயில் கொண்டீர்”

எனவும் கோவல் குறிப்பிடப்பட்டிருப்பது காணலாம்.

பாடல் பெற்ற நடுநாட்டு ஊர்கள்

பொதுவாகப் பாடல் பெற்ற ஊர்கள் என்றாலேயே ஒரு தனிப் பெருமைதான்! நடு நாட்டில் மூவர் தேவாரப் பாடல் பெற்றள்ளனவாகத் தேவாரம் பதிப்பித்துள்ள பெரியோர்கள் குறிப்பிட்டுள்ள ஊர்களின் பெயர்கள் அவர்கள் அமைத்துள்ள வரிசைப்படி வருமாறு:

நெல்வாயில் அரத்துறை, திருத்தூங்கானை மாடம் (பெண்ணாகடம்), திருக்கூடலை யாற்றூர், திருவெருக்கத்தம் புலியூர் (திருவெருக்கற்றம் புலியூர்), திருத்தினை நகர் (தீர்த்தன நகர்), திருச்சோபுரம் (தியாகவல்லி), திருவதிகை, திருநாவலூர் (திருநாம நல்லூர்), திருமுதுகுன்றம் (விருத்தாசலம்), திருநெல்வெண்ணெய் (நெய் வெண்ணெய்), திருக்கோவலூர் (கீழவூர்), அறையணி நல்லூர் (அரகண்ட நல்லூர்), திருவிடையாறு, திருவெண்ணெய் நல்லூர், திருத்துறையூர், வடுகூர் (வடுவூர், திருவாண்டார் கோயில்), திருமாணிகுழி, திருப்பாதிரிப் புலியூர், திருமுண்டீச்சுரம் (கிராமம்), திருப்புறவார் பனங்காட்டூர் (பனையபுரம்), திருவாமாத்தூர், திருவண்ணாமலை, இவற்றுடன், திருவக்கரை, இரும்பை, அரசிலி (ஒழுந்தியாப்பட்டு) ஆகிய மூன்று ஊர்களையும் நாம் சேர்த்துக் கொண்டுள்ளோம்.

தேவாரப் பதிப்பாசிரியர்கள் இந்த வரிசையில் ஊர்ப் பெயர்களை நிறுத்தியிருப்பினும், நாம் மேலே, தேவார ஆசிரியர் ஒவ்வொருவரையும் பற்றிய தனித்தனித் தலைப்பின்கீழ் இவ்வூர்ப் பெயர்களை வெவ்வேறு வரிசைகளில் (பக்கங்கள் : 200, 202, 203, 204) நிறுத்தியுள்ளோம். அஃதாவது, தேவார ஆசிரியர் மூவரும் அவ்வவ்வூர்க்குப் பயணம் செய்த வரிசை முறையில் அவ்வரிசைகள் நம்மால் அமைக்கப்பட்டன. அந்தப் பயண வரிசை முறை, சேக்கிழார் பெரிய புராணத்தில் தெரிவித்துள்ள வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு அமைக்கப்பட்டது.

இனி, நடுநாட்டில் தேவாரப் பாடல் பெற்றுள்ள இவ்வூர்கள் எந்தெந்த வட்டத்தைச் (தாலுகாவைச்) சேர்ந்தன - யார் யாருடைய தேவாரத்தில் எத்தனை எத்தனை பதிகங்கள் பெற்றுள்ளன - என்பதைப் பின்வரும் அட்டவணையில் காணலாம்: