பக்கம்:கெடிலக் கரை நாகரிகம்.pdf/211

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

210

கெடிலக்கரை நாகரிகம்



எஞ்சாமல் வயிற்றடக்கி ஆலின் மேலோர்
இளந்தளிரில் கண்வளர்ந்த ஈசன் தன்னைத்
துஞ்சாநீர் வளஞ்சுரக்கும் பெண்ணைத் தென்பால்
தூயநான் மறையாளர் சோமுச் செய்ய
செஞ்சாலி விளைவயலுள் திகழ்ந்து தோன்றும்
திருக்கோவ லூரதனுட் கண்டேன் நானே”

திருமங்கையார் தித்திக்கும் செந்தமிழால் எவ்வளவு சுவையாகப் பாடியிருக்கிறார்! இவ்வாறு இவர் பெரிய திருமொழியில் திருக்கோவலூருக்காகத் தனியே பத்துப் பாடல்கள் பாடியிருப்பதன்றி, வேறு சில விடங்களிலும் நடுநடுவே திருக்கோவலூரை எடுத்தாண்டுள்ளார்: பெரிய திருமொழி - ஆறாம் பத்து - பத்தாம் திருமொழி - ஐந்தாம் பாடலில்.

“குடையா வரையால் நிரைமுன் காத்த பெருமான் மருவாத
விடைதா னேழும் வென்றான் கோவல் நின்றான்.”

எனவும், ஏழாம்பத்து - மூன்றாம் திருமொழி - இரண்டாம் பாடலில்,

“....மகரக் குழைக்காதனை மைந்தனை
மதிட்கோவ லிடைகழி யாயனை....”

எனவும். கோவலூரைக் குறிப்பிட்டுப் பாடியுள்ளார். இவையேயன்றி, திருமங்கையார் தாம் அருளியுள்ள திருநெடுந்தாண்டகத்திலும் மூன்று (6, 7, 17) பாடல்களில் கோவலூரைப் பாடியுள்ளார்; முறையே அப்பாடல்களில் சில அடிகள் வருமாறு:

“...புலம்பரந்து பொன்விளைக்கும் பொய்கை வேலிப்
பூங்கோவ லூர்தொழுதும் போது நெஞ்சே”

“...பொற்புடைய மலையரையன் பணிய நின்ற
பூங்கோவ லூர்தொழுதும் போது நெஞ்சே”

“... தண்காவும் தன்குடந்தை நகரும் பாடித்
தண்கோவ லூர்பாடி ஆடக்கேட்டு.”

இந்நூல்களிலன்றி, திருமங்கை யாழ்வார் தமது ‘சிறிய திருமடல்’ என்னும் நூலில் (69),

“காரார் திருமேனி காணு மளவும் போய்ச்
சீரார் திருவேங் கடமே திருக்கோவ லூரே”

எனவும், ‘பெரிய திருமடல்’ என்னும் நூலில் (122),