பக்கம்:கெடிலக் கரை நாகரிகம்.pdf/215

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

214

கெடிலக்கரை நாகரிகம்



பரமாம் பரமாம் படுகடலென் திக்கும்
கரமாம் அவர்க்குயிர்ப்பாம் கால்”

என்னும் வெண்பாவை எழுதிபனுப்பினார். பாடலைப் படித்த சைவர்கள் மிகவும் வியந்து மகிழ்ந்து, திருப்பாதிரிப் புலியூர்ச் சிவன்மேல் ஒரு கலம்பகம் படுமாறு தேவரை வேண்டினர். தேளுரும் அவ்வாறே பாடித் தந்தார்.

நூலில் இவ்வெண்பாவை இரண்டாம் பாடலாக ஆசிரியர் வைத்துள்ளார்.

இவ்வாறு முதலில் சைனராயிருந்த தொல்காப்பியத் தேவர் பின்னர்ச் சைவராக மாறினார். அவரது காலம், மத மாற்றங்கள் நிரம்ப நடந்த காலமாகும். இவர் ஒன்பதாம் நூற்றாண்டின் இறுதி அல்லது பத்தாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வாழ்ந்தவர் என்ற செய்தி முன்பே ஓரிடத்தில் (பக்கம் : 69-70) ஆராய்ந்து கூறப்பட்டுள்ளது.

நூல் பெருமை

கலம்பகம் பாடுவதில் இரட்டைப் புலவர்கள் மிகவும் வல்லவர்கள் (Champions) என்பதை, ‘கலம்பகத்திற்கு இரட்டையர்கள்’ என்னும் ஆன்றோர் மொழியால் அறியலாம். இந்த இரட்டையர்கள் மிகவும் பெயர் பெற்று விளங்கிய திருப்பாதிரிப் புலியூர்க் கலம்பகத்தை மிகவும் விரும்பிப் போற்றிப் படித்து வந்தார்கள். இதன்பால் அவர்கட்கு இருந்த ஈடுபாடு அளவிடற்கரியது. கலம்பகச் சுவைகண்ட அவர்கள் தாமும் தில்லைக் கலம்பகம், திருவாமாத்துர்க் கலம்பகம் முதலிய நூல்கள் பாடினர்.

ஒருமுறை இரட்டையர்கள் திருப்பாதிரிப் புலியூருக்கு வந்தபோது, கலம்பகம் பாடுவதில் வல்லவர்களான அவர்களை நோக்கி, திருப்பாதிரிப் புலியூர்ச் சிவன்மேல் ஒரு கலம்பகம் பாடுமாறு ஊர் மக்கள் வேண்டினர். அதற்கு இரட்டையர்கள், இவ்வூர் இறைவன்மேல் தொல்காப்பியத் தேவர் கலம்பகம் பாடிய பிறகு நாங்கள் பாடினால் எடுபடாது என்று கூறித் தட்டிக் கழித்தனர். இதனை,

“தொல்காப் பியத்தேவர் சொன்னதமிழ்ப் பாடலன்றி
நல்காத் திருச்செவிக்கு நாமுரைப்ப தேறுமோ
மல்காப் புனறதும்ப மாநிலத்திற் கண்பிசைந்து
பல்காற் பொருமினர்க்குப் பாற்கடலொன் றீந்தார்க்கே”

என்னும் இரட்டையர் பாடலால் அறியலாம். இக்கலம்பகத்தைப் புலவர்களே பெரிதும் பாராட்டியிருக்கிறார்கள்