பக்கம்:கெடிலக் கரை நாகரிகம்.pdf/220

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கெடிலக்கரை இலக்கியங்கள்

219


திருப்பாதிரிப் புலியூர்ப் புராணம்

திருப்பாதிரிப் புலியூர்ச் சிவன் பெருமையைக் கூறும் நூல், இறைவன் திருக்கோயில் கொண்டுள்ள ஒவ்வோர் ஊர் பேராலும் புராணம் இயற்றுவது பிற்கால மரபு. இப்புராணம் பதினெட்டாம் நூற்றாண்டில் இயற்றப்பட்டது.

நூலாசிரியர்

இந்நூலின் ஆசிரியர் இலக்கணம் சிதம்பரநாதமுனிவர் என்பவர். பெயரிலிருந்தே இவர் இலக்கணத்தில் வல்லவர் என்பது விளங்கும். இவர் திருவாவடுதுறை ஆதீனப் புலவர்களுள் ஒருவர். அக்காலத்தில் பெரும்புலமை பெற்றுச் சிறந்திருந்த சிவஞான முனிவரின் மாணாக்கர் சிதம்பரநாத முனிவர் என்பதொன்றே இவரது புலமைக்குப் போதிய சான்றாகும். காலம் பதினெட்டாம் நூற்றாண்டு.

நூல் அமைப்பு

இப்புராணத்தில் பாயிரம், திருநாட்டுப் படலம், திருநகரப் படலம், தல விசிட்டச் சருக்கம் முதல் திருவிழாச் சருக்கம் ஈறாகப் பதினாறு சருக்கங்கள் உள்ளன. ஆக மொத்தம் பத்தொன்பது உறுப்புக்கள் உள்ளன. நூல் முழுவதிலுமுள்ள மொத்தச் செய்யுட்கள் 987 ஆகும். சில செய்யுட்கள் முற்றிலும் கிடைத்தில. சில அரைகுறையாயுள்ளன.

பதிப்பு

இந்நூலினை, திருப்பாதிரிப் புலியூர் ஞானியார் மடத்து ஐந்தாம் பட்டத்து ஞானியார் அடிகளார் 1896 ஆம் ஆண்டு ஒலைச் சுவடியை ஆராய்ந்து முதன் முதலாக அச்சிற் பதிப்பித்தார்கள். நூலின் முகப்பை, ஞானியார் அடிகளார் எழுதியுள்ள முகவுரையும், அன்று கூடலுர் நகர்க் கல்லூரித் தமிழ்ப் பேராசிரியராயிருந்த மு. சாமிநாத ஐயரவர்கள் இயற்றிய பன்னிருபாக்கள் கொண்ட சிறப்புப் பாயிரமும் அணி செய்கின்றன. அச்சு இடுவதற்கு முன்பே ஒலைச் சுவடியின் முகப்பில் இருந்த சிறப்புப் பாயிரச் செய்யுட்கள் இரண்டு அச்சு நூலில் கொடுக்கப்பட்டுள்ளன. இவற்றை இயற்றியவர் பெயர் காணப்படவில்லை. ஏடு பெயர்த்து எழுதிய எவரோ ஒருவரால் இவை இயற்றப்பட்டிருக்கலாம். திருப்பாதிரிப் புலியூர்ச் சிவன் கோயிலார், இப்போது இப் புராணத்தைப் புதிதாகப் பதிப்பிக்கும் முயற்சியில் ஈடுபட்டிருப்பதாகத் தெரிவித்தார்கள்.

மு. சாமிநாத ஐயரவர்களைக் கொண்டு இப் புராணத்திற்குப் பொழிப்புரை போன்ற ஒர் உரைச் சுருக்கம் எழுதச் செய்து நூலுடன் இணைத்துப் பதிப்பித்துள்ள ஞானியார் அடிகளாரின் முயற்சி பெரிதும் பாராட்டத்தக்கது.