220
கெடிலக்கரை நாகரிகம்
நூற் செய்திகள் சில
நூலில் திருநாட்டுப் படலத்தில் திருமுனைப்பாடி நாட்டின் வளங்களும் பெருமைகளும் சிறக்கக் கூறப்பட்டு உள்ளன. நமது இந்தியத் துணைக் கண்டமாகிய பாரத நாட்டிற்கு ‘நாவலந் தீவு’ என்னும் பெயர் உண்மையை ஆசிரியர் சுட்டிக் கூறியுள்ளார்.
"இன்ன நாவலந் தீவினில் காஞ்சியின் தென்பால்..
என்பது பாடல் (102) பகுதி. தீவு என்பதை இங்கே துணைக் கண்டம் என நாம் நிலைமைக்கேற்றாற்போல் பொருள் கொள்ள வேண்டும். மற்றும், “நாட்டின் மேம்படுந் திருமுனைப் பாடி நாடு என்றே.”(104) எனத் திருமுனைப் பாடி நாட்டை நாடுகளுள் மேம்பட்டதாக ஆசிரியர் சிறப்பித்துள்ளார்.
அடுத்துத் திருநகரப் படலத்தில், திருப்பாதிரிப் புலியூரும் அதைச்சார்ந்த பகுதிகளுமான இன்றைய கடலூர் நகரம் மிகவும் சிறப்பிக்கப்பட்டுள்ளது. கடலூர்த் துறைமுகத்தின் பரந்த பெருமையை இப்படலத்தில் காணலாம்.
நூலுக்குள்ளே பாடலேசர் சித்தராய் விளையாடிய சருக்கத்தில், திருப்பாதிரிப் புலியூருக்கு, மாணிக்கவாசகர் வருகையும், அவருக்காகக் கெடிலம் ஆறு திசை மாறியதும் இடம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இப்புராணத்தில், உமையம்மையார் பாதிரி மரத்தின் கீழ் இருந்து நோன்பு கொண்ட நிகழ்ச்சியும் புலிக்கால் முனிவர், மங்கணர் முதலியோர் தவம் செய்து நற்பேறு பெற்றமையும் இன்ன பிற செய்திகளும் புராண மரபுப்படி விவரிக்கப்பட்டுள்ளன.
இப்போது வண்டிப் பாளையம் என அழைக்கப்படும் ஊர், அன்று அப்பர் கரையேறியதால் ‘கரையேற விட்டவர் குப்பம்’ என அழைக்கப்பட்டது. இவ்வூர்மேல் இயற்றப்பட்ட நூலே ‘கரையேற விட்ட நகர்ப்புராணம்’ என்பது.
ஆசிரியர்
இப் புராணத்தின் ஆசிரியர் க. ரா. சிவசிதம்பர முதலியார் என்பவர். இவர் ஊர் திருப்பாதிரிப் புலியூர். “இயற்றமிழ்ப்