பக்கம்:கெடிலக் கரை நாகரிகம்.pdf/228

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கெடிலக்கரை இலக்கியங்கள்

227


மண்ணுலகில் வந்து திருநாவுக்கரசராகப் பிறந்தார் என்ற செய்தி இந்த நூலிலும் கூறப்பட்டுள்ளது.

கெடிலம் ஆற்றிற்குத் திருவதிகைப் புராணத்தில் சிறப்பிடம் அளிக்கப்பட்டுள்ளது. கெடிலோற்பவப் படலம், தீர்த்த விசேடப் படலம் என்னும் இரு படலங்கள் கெடிலத்தின் பெருமைக்கென்றே இயற்றப்பட்டுள்ளன. கங்கை சிவனது முடியிலிருந்து கீழே வந்தது; கெடிலம் சிவனது உடலிலிருந்து வியர்வையாய் வெளிவந்தது; எனவே இரண்டும் ஒத்த தன்மையன கெடிலத்தைக் கங்கையென்றே சொல்லலாம். என்னும் கருத்து இந்நூலில் கூறப்பட்டுள்ளது. கெடிலம் என்றும் வற்றாத ‘சீவநதி’ என்னும் உண்மை இப்புராணத்தில் தெரிவிக்கப்பட்டிருப்பது மிகவும் குறிப்பிடத்தக்கது.

இந்நூலாசிரியர் திருமுனைப்பாடி நாட்டை மிகமிக உயர்த்திப் பேசியுள்ளார்.

“உலகுறு மலையின் மேலாம் உயர்கிரி இமயம் போலும்

திலகநன் னாட்டின் மேலாம் திருமுனைப் பாடி நாடு’’

என்னும் பாடலில் (திருநாட்டுப் படலம் -4), உலக மலைகளுள் உயர்ந்தது இமயம் (எவரெஸ்ட்) போல, நாடுகளுள் உயர்ந்தது திருமுனைப்பாடி நாடு எனப் புகழ்ந்துள்ளார் ஆசிரியர்.

பல்வேறு இலக்கியங்கள்

கெடிலநாட்டு ஊர்களின்மேல் இன்னும் பல்வேறு இலக்கியங்கள் பல்வேறு காலங்களில் இயற்றப்பட்டு உள்ளன.

திருநாவலூர்ப் புராணம்

திருநாவலூரின் பெருமையை விளக்கும் இந்தப் புராணத்தில் ஒன்பது படலங்கள் உள்ளன. மொத்தச் செய்யுட்கள் : 514. இந்நூலின் ஆசிரியர், திருவெண்ணெய் நல்லூரில் தோன்றிய இராசப்ப நாவலர் என்பவர். இவர் திருவெண்ணெய் நல்லூர்க்கலம்பகம் என்னும் நூலும் இயற்றியுள்ளார். திருநாவலூர்ப் புராணத்தில் ஊர்ப்பெருமை, சுந்தரர் பற்றிய செய்தி முதலியவை புகழ்ந்து கூறப்பட்டுள்ளன.

இன்னும், திருக்கோவலூர்ப் புராணம், திருவாமூர்ப் புராணம், திருவதிகை மான்மியம், திருமாணிகுழிப் புராணம் முதலிய பல்வேறு புராண நூல்களும், திருவதிகை உலா, திருவயிந்திரபுரம் மும்மணிக் கோவை, நவரத்தின மாலை முதலிய பல்வேறு சிற்றிலக்கியங்களும் உள்ளன அவற்றையெல்லாம் விரிப்பிற் பெருகும்.