பக்கம்:கெடிலக் கரை நாகரிகம்.pdf/237

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

236

கெடிலக்கரை நாகரிகம்


அடைய வளைந்தான் வீரர்

அருள்புனை தொண்டையர் கோமா
னடைய வளைந்தபிரான்
பொருபடை மன்னவர் வீர
மொன்றே பொரும்போர் தொலைந்தும்
வருகதிர் முந்து குணதிசை
ஆள்வர் வடக்கிருப்பர்
வெருவெரு தென்திசை கொள்வர்
செல்லாநிற்பர் மேற்றிசைக்கே.”

இச் செய்யுள், தொண்டையர் கோமான் அடைய வளைந்தான் என்னும் வேந்தனுடைய படைமறவரின் பெருமையை அறிவிக்கிறது.

நடுநாட்டு ஊர்களிலுள்ள ஆயிரக்கணக்கான கல் வெட்டுகளைப் படித்துப் பார்த்தால், அந்நாட்டை அவ்வப்போது ஆண்ட மன்னர்கள், அவர்தம் காலம், ஆட்சிமுறை, அறச் செயல்கள், நடுநாட்டு மக்களின் கல்வி - சமயம் - குடும்பம் முதலியன பற்றிய வாழ்க்கை நிலைகள், நாட்டின் உட்பிரிவுகள், ஊர்களின் பழைய பெயர்கள், நாட்டு வளம் முதலிய பல்வேறு செய்திகளை அறிந்து கொள்ளலாம்.

கெடிலநாட்டுக் கல்வெட்டுகள் அனைத்திலும் கெடில நாடு தொடர்பாகக் கூறப்பட்டுள்ள செய்திகள் அனைத்தையும் இங்கே எடுத்துக் கூறுவதென்றால் அதற்கு ஒர் எல்லையே யிராது; இந்நூல் ஆயிரக்கணக்கான பக்கங்களுடையதாய் மிக விரிந்துவிடும்.

“பண்டு தமிழில் உரைநடை இல்லை; ஆங்கிலேயர் வந்த பிறகே பத்தொன்பதாம் நூற்றாண்டிலிருந்தே தமிழில் உரைநடை தோன்றிற்று” என்று குறைகூறுபவர்க்கு, ஆங்கிலமொழி உருவாவதற்குப் பல நூற்றாண்டுகட்கு முன்பே - இற்றைக்கு 1500 ஆண்டு காலத்திற்கு முன்பே தமிழில் உரைநடை இருந்தது என்ற சூடான பதிலை நம்நாட்டுக் கல்வெட்டுகள் அளிக்கும்.