பக்கம்:கெடிலக் கரை நாகரிகம்.pdf/238

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
16. கெடில நாட்டு வளங்கள்

கெடிலக்கரை நாடு மிகமிக உயர்ந்த வளங்களை உடைய நாடு என்று சொல்ல முடியாவிடினும், வளம் அற்ற நாடு என்றும் சொல்ல முடியாது; கூடியவரையும் சராசரி வளமுள்ள நாடு என்று சொல்லலாம். மிகுந்த அளவில் இல்லாவிடினும், ஒரளவாயினும் மலை (குறிஞ்சி) வளம், காட்டு (முல்லை) வளம், வயல் (மருதம்) வளம், கடல் (நெய்தல்) வளம் என்னும் நானில வளமும் உடையது கெடில நாடு.

மலைவளமும் காட்டுவளமும்

கல்வராயன் மலை

பொதுவாகத் தென்னார்க்காடு மாவட்டத்தில் - சிறப்பாகக் கெடிலம் ஓடும் மூன்று வட்டங்களுள் கள்ளக் குறிச்சி வட்டமே கூடுதலான மலைவளமும் காட்டுவளமும் உடையது. இங்குள்ள கல்வராயன் மலைத்தொடர் வளமுடையதாகும். இம்மலையில் தேக்கு மரங்கள், சந்தன மரங்கள், கடுக்காய் மரங்கள், மூங்கிற் காடுகள், முந்திரிக் காடுகள் முதலியவை உள்ளன. இங்கே ஏலம், இலவங்கம், காப்பி முதலியனவும் பயிரிடலாம். இன்னும் பல்வேறு காய்கறி கனிவகைகள் பயிரிடவும் ஏற்ற சூழ்நிலையுடையது இம்மலை. இம்மலையேயன்றி, இவ்வட்டத்தில் ஆங்காங்கே தனித்தனிக் குன்றுகளும் காட்டுப் பகுதிகளும் உள்ளன. கெடிலம் ஆறு தோன்றும் மையனூர் மலைக் காட்டில் பல்லாண்டுகட்குமுன் அகில், சந்தனம், தேக்கு, பாதிரி கொன்றை முதலிய மரவகைகள் நிறைந்திருந்தாக அந்த வட்டாரத்திலுள்ள பெரியவர்கள் தெரிவிக்கின்றனர். இப்போது உயர்வகை மரங்கள் அழிந்தும் - அழிக்கப்பட்டும் மறைந்துவிட்டதாகச் சொல்லப்படுகிறது. கெடில ஆற்றின் வெள்ளத்தில் பலவகை உயர் மரங்களும் மணிகளும் காட்டு விலங்குகளும் அடித்துக் கொண்டுவரப் பட்டனவாகக் கெடிலக்கரை இலக்கியங்களில் பாடப்பட்டிருப்பதை உண்மையென்றே நம்பலாம்; ஏனெனில், கெடிலம் ஓரளவு மலைவளமும் காட்டு வளமும் உடைய கள்ளக்குறிச்சி வட்டத்திலிருந்து தோன்றி வருகிறதல்லவா?

முள்ளூர் மலைக்காடு

அடுத்துத் திருக்கோவலூர் வட்டத்திலும் சிறுசிறு மலைக் குன்றுகளும் சிறு சிறு காட்டுப் பகுதிகளும் உள்ளன.