பக்கம்:கெடிலக் கரை நாகரிகம்.pdf/294

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கெடிலக்கரை ஊர்கள்

293



படத்தில் நமது இடக்கைப் புறமாக இருக்கும் கோபுரம் கோயிலின் முதற்பெரு வாயிலாகும். இது கோயிலின் மேற்கே உள்ளது. எனவே, இக்கோயில் மேற்கு நோக்கியது என்பது புலனாகும். இஃது ஒரு புதுமையே. படத்தில் நமது வலக்கைப் புறமாகத் தெரியும் கோபுரம் அம்மன் கோயில் கோபுரமாகும். அதற்குப் பக்கத்தில் இடக்கைப் புறமாகத் தெரியும் மரம் வில்வமரம். அதற்கும் பக்கத்தில் சிறு கோபுரம் போல் தெரிவது. சிவலிங்கம் இருக்கும் கருவறைக்கு (கர்ப்பக் கிருகத்திற்கு) மேலுள்ள தூபி விமானம் ஆகும்.

(இந்தப்படம், கோயில் வெளிக்கோபுரம், கருவறை விமானம், வில்வமரம், அம்மன் கோயில் கோபுரம் முதலியன ஒருசேரத் தெரிவதற்காக ஒரு வீட்டுக் கூரையின்மேல் ஏறி நின்றுகொண்டு குறுக்கு வாட்டத்தில் எடுக்கப்பட்டது.)

இந்தக்கோயிலில் பல்லவர், சோழர், இராட்டிரகூடர், விசயநகர மன்னர் முதலியோர் காலத்துக் கல்வெட்டுகள் உள்ளன. 79 கல்வெட்டுகள் படி எடுக்கப்பட்டுள்ளன. அவற்றுள், முதலாம் இராசராசசோழன், அவன் மனைவி உலோகமாதேவி ஆகியோரின் அறக்கட்டளை பற்றிய கல்வெட்டுகள், விசயநகர மன்னரின் ஒர் அணை பற்றிய கல்வெட்டு முதலியவை குறிப்பிடத் தக்கன.