பக்கம்:கெடிலக் கரை நாகரிகம்.pdf/295

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

294

கெடிலக்கரை நாகரிகம்


இந்தக் கோயிலின் வடக்குத் திருச்சுற்றில் அரசன் அரசியைக் குறிக்கும் மேலுள்ள சிற்பம் காணப்படுகிறது.

இந்தச் சிற்பம் பல்லவ அரசன் - அரசியைக் குறிப்பதாகக் கருதப்படுகிறது. ஆனால், எந்தப் பல்லவன் என்று குறிப்பிட முடியாது. உருவ அமைப்பைக் கொண்டு பல்லவர் என உய்த்துணர வேண்டியுள்ளது. எனவே, இந்தக் கோயில் பல்லவர் காலத்தில் கட்டப்பட்ட பழைமையுடையது எனக் கொள்ளலாம்.

மலையமான் மரபினரின் அரண்மனை இந்தக் கீழுர்ப் பகுதியில்தான் இருந்தது எனச் சொல்லப்படுகிறது. திருப்பாதிரிப் புலியூர் ஞானியார் மடத்தின் முதல் ஆதீன மடம் கீழுர்ச் சிவன் கோயில் அருகில் உள்ளது. முதல் பட்டத்து அடிகளாரின் அடக்கம் (சமாதி) அம்மடத்தில் இருக்கிறது. முதல் பட்டத்து அடிகளார்க்குச் சிவபெருமான் ஆவணி மூலநாளில் அருள்புரிந்த திருவிழா ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. திருப்பாதிரிப் புலியூர் ஐந்தாம் பட்டத்து அடிகளார் கோவலூர் மடத்தில் அடிக்கடி வந்து தங்கி ஆற்றிய பணிகள் மிகப்பல. இந்த ஆதீனமேயன்றி பைந்தமிழ் பரப்பும் குன்றக்குடி அடிகளார் மடத்தின் முதல் தலைமையாதீனமும் திருக்கோவலூரிலேயே இருந்தமை குறிப்பிடத்தக்கது. இவ்வாறு பல்வேறு கோணங்களில் திருக்கோவலூர் ஒளிவீசித் திகழ்கிறது.