பக்கம்:கெடிலக் கரை நாகரிகம்.pdf/306

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கெடிலக்கரை ஊர்கள்

305



ஒருகாலத்தில் செங்கோல் வேந்தரின் தலைநகராய்ச் செழித்துச் சிறப்புற்றிருந்த சேந்தமங்கலத்தை அடைய வேண்டு மெனில், ஊருக்கு அண்மையில் ஒரு கி.மீ. தொலைவுக்கு நல்ல பாதை இல்லாதது பெருவியப்பிற்கும் பேரிரக்கத்திற்கும் உரியது. வடக்கு, கிழக்குப் பகுதிகளிலிருந்து சேந்தமங்கலம் செல்லவேண்டுமெனில், சென்னை - திருச்சி பெருநாட்டு (National Highways) நெடுஞ்சாலையில் - சென்னைக்குத் தென்மேற்கே 183ஆம் கி.மீட்டரில் (114 ஆம் மைலில்) - கெடிலம் ஆற்றின்மேல் உள்ள பாலத்திற்குத் தென்புறமாக இறங்க வேண்டும். கெடிலம் பாலத்திற்கு வடக்கே ஒரு கி.மீ. தொலைவில் பண்ணுருட்டியிலிருந்து திருநாவலூர் - பரிக்கல் வழியாகத் திருவெண்ணெய் நல்லூர் செல்லும் மாவட்டக் குறும்பாதை யொன்று சென்னை - திருச்சி பெருநாட்டு நெடுஞ்சாலையைக் குறுக்கிட்டுக் கடப்பதும், கெடிலம் பாலத்திற்கு வடக்கே 5 கி.மீ. தொலைவில் கடலூர் - திருக்கோவலூர் மாநில (State Highways) நெடுஞ்சாலை சென்னை - திருச்சி பெருநாட்டு நெடுஞ்சாலையைக் குறுக்கிட்டுக் கடப்பதும், பயணம் செய்வோர்க்கு உதவக்கூடிய அடையாளக்குறிப்புக்களாகும். இதற்கு, மேற்குப் பகுதிகளிலிருந்து சேந்தமங்கலத்தைச் சேர வேண்டுமாயின், உளுந்துார்ப்பேட்டைக்கு வடகிழக்கே 10 கி.மீ. தொலைவில் கெடிலம் பாலத்திற்குத் தென்புறமாகப் பெருநாட்டு நெடுஞ்சாலையில் இறங்க வேண்டும்.

பெருநாட்டு நெடுஞ்சாலையில் இறங்கியதும், அங்கிருந்து கிழக்கு நோக்கிச் செல்லும் மண்பாதை வழியே ஒரு கி.மீ. தொலைவு சென்றால் சேந்தமங்கலம் கோட்டையையும் கோயிலையும் கண்டுகளிக்கலாம். அல்ல கண்டு கடுந்துயர் எய்தலாம் நெடுஞ்சாலையிலிருந்து ஊருக்குப் பேருந்து வண்டி (பஸ்) கிடையாது; கால்நடையாகவோ, கட்டை வண்டியிலோ செல்ல வேண்டும். அங்கே கட்டை வண்டி கிடைக்காதாதலின் கால்களைத்தான் நம்பவேண்டும். கோடைக்காலத்தில் வேண்டுமானால் சிற்றுந்து வண்டியில் (பிளழ்சர் காரில்) செல்லலாம். மழைக்காலத்தில் வழியில் உளைகள் ஏற்பட்டு விடுவதால் சிற்றுந்து வண்டியில் செல்வது அரிது. இங்கே இது குறித்து இவ்வளவு எழுதுவதன் காரணம், இதைப் படிப்பவர்கள், சேந்தமங்கலம் சென்று கோட்டையையும் கோயிலையும் கட்டாயம் காண வேண்டும் என்னும் நோக்கமேயாகும்.

சேந்தமங்கலத்தைத் தலைநகராகக் கொண்டு முனையரையர் மரபு மன்னர்களும், பிற்காலப் பல்லவர்