பக்கம்:கெடிலக் கரை நாகரிகம்.pdf/310

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கெடிலக்கரை ஊர்கள்

309



இந்தக் கோட்டைக் கோயிலுக்குள் பல்லவர், பாண்டியர், விசயநகரக் கிருஷ்ண தேவராயர் முதலியோரின் கல்வெட்டுகள் பலவற்றைக் காணலாம். கோயிலின் இரண்டாவது வாயிற் சுவர்களில் உள்ள கல்வெட்டுகள் ஒரளவு படிக்கக் கூடிய நிலையில் உள்ளன.

சேந்தமங்கலம் வட்டாரத்தில் நிலத்தைத் தோண்டினால், எத்தனையோ கட்டடங்களும் பல்வேறு பொருள்களும் கிடைக்குமென அங்குள்ளவர்கள் கூறுகின்றனர். சேந்த மங்கலத்தைச் சுற்றி 10 கி.மீ. வட்டாரத்தில் நிலத்தைத் தோண்டினால் கட்டடங்களின் இடிபாட்டுக் கற்கள் கிடைப்பதால், கோட்டை - அரண்மனை உட்படத் தலைநகரம் 10 கி.மீ. சுற்று வட்டாரத்திற்குப் பரவியிருந்திருக்க வேண்டும் எனச் சொல்லப்படுகிறது. இந்தப் பரப்பெல்லைக்குள் திருநாவலூரும் அடங்கியிருக்க வேண்டும். இதற்குச் சான்று, திருநாவலூரில் உள்ள கச்சேரி மேடு என்னும் பகுதியாகும். கச்சேரி மேடு என்பது, அரசன் கொலுவீற்றிருந்து நாட்டு நடப்புக்களைக் கவனிக்கும் திருவோலக்க மாளிகை இருந்த இடமாகும்.

சேந்தமங்கலம் கோட்டைக்கு மேற்கே சிறிது தொலைவில் ஒரு தோப்பும் ‘நீராழிக்குளம்’ என்னும் பெயருடைய ஒரு குளமும் உள்ளன; அங்கிருந்து மேற்கே பாதுர்ப் பக்கம் ஒரு சுரங்கம் செல்வது கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது. கோட்டைக்கு எதிரில் வடபுறமாக ஒரு குளம் இருக்கிறது. அக் குளத்தங்கரையில் குதிரைச் சிலைகள் இருப்பதாகவும் போய்ப் பார்க்கும்படியாகவும் மக்கள் கூறினர். போய்ப் பார்த்தபோது, இரண்டு கருங்கற் குதிரைகள் இருப்பது தெரிந்தது. அவற்றுள், ஒன்று கால் உடைபட்டுப் படுத்துக் கிடக்கிறது; மற்றொன்று நான்கு கால் பாய்ச்சலில் பறப்பது போல் தோற்ற மளிக்கிறது. இப்படியாகச் சேந்தமங்கலத்தை ஆராய்ந்தால் வரலாற்றுச் சுவடுகள் பல கிடைக்கும். ஒரு காலத்தில் பேரொளிiசித் திகழ்ந்த கோட்டைக்கு எதிரில் இப்போது குடிசை வீடுகள் இருப்பது இரங்கத்தக்க காட்சியாகும்.

சேந்தமங்கலம் என்னும் பெயரில் பல்வேறு பகுதிகளில் பல ஊர்கள் உள்ளன. அவற்றினின்றும் இந்தச் சேந்த மங்கலத்தை வேறு பிரித்துணர வேண்டியது இன்றியமையாததாகும். ஒரு காலத்தில் சேந்தன் என்னும் பெயருடைய சிற்றரசனுக்கு உரியதாயிருந்ததால் இது சேந்தமங்கலம் என்னும் பெயர் பெற்றதாகச் சொல்லப்படுகிறது. அங்ங்னமெனில், எல்லாச் சேந்தமங்கலத்தின் பெயர்க் காரணமும் இதுதானோ?