பக்கம்:கெடிலக் கரை நாகரிகம்.pdf/321

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

320

கெடிலக்கரை நாகரிகம்



வீரட்டானம்

திருவதிகைக் கோயிலின் பெயர் வீரட்டானம்; இறைவன் பெயர் வீரட்டானேசுரர்; இறைவி பெயர் திரிபுர சுந்தரி, பெரியநாயகி. மரம் கொன்றை கருவறையிலுள்ள இலிங்கம் பதினாறு பட்டைகள் கொண்டது. இலிங்கத்திற்குப் பின்னால் சுவரில் இறைவன் உருவமும் இறைவி உருவமும் உள்ளன. சுதையால் செய்யப் பெற்ற இந்த அம்மையப்பர் உருவத் தோற்றம் மிகவும் கவர்ச்சியாயிருக்கிறது. இந்த உருவங்கள் மேல் நோக்கிற்குப் புலப்படா விளக்கொளியை மிகுத்துக் கூர்ந்து நோக்கினாலேயே புலப்படும். திருவதிகையில் சிவபெருமான் உமையம்மையைத் திருமணம் செய்து கொண்டாராம்; அதன் அறிகுறியாகத்தான், சிவலிங்கத்திற்குப் பின்னால் அம்மையப்பர் உருவங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றனவாம்; இறைவனுக்கும் இறைவிக்கும் திருமணம் நடந்ததாகச் சொல்லப்படும் திருப்பதிகளில் இப்படி அமைந்திருப்பது மரபாம். தேவ தேவியின் திருமணம் நடைபெற்ற இடம் திருவதிகையாதலால், வெளியூர் மக்கள் பலர் இங்கு வந்து திருமணம் செய்து கொண்டு செல்கின்றனர். இங்கே திருமணம் செய்து கொண்டால் நன்கு வாழலாம் என்பது ஒரு தெய்வ நம்பிக்கை. திருவதிகையில் இறைவி தவமிருக்க, இறைவன் இங்கு வந்து திருமணம் செய்து கொண்டு போனதால், இறைவியின் சிறப்பை அறிவிக்குமுகத்தான், திருவதிகைப் பெரிய கோயிலில் சிவன் கோயிலுக்கு வலப்புறம் அம்மன் கோயில் அமைக்கப் பட்டிருக்கிறது; மற்ற ஊர்களில் இறைவன் கோயிலின் இடப் புறத்திலேயே இறைவி கோயில் இருக்கும். இத்துணை சிறப்பிற்குரிய திருவதிகைக் கோயிலின் தோற்றத்தைப் பின்வரும் படத்தில் காணலாம்: