பக்கம்:கெடிலக் கரை நாகரிகம்.pdf/380

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கெடிலக்கரை ஊர்கள்

379


உறுதிப்படும். அப்படி இரண்டும் வெவ்வேறானவை என்றால், பாடலிபுத்திரம் அன்று எங்கே யிருந்தது? என்ற வினா எழும். இதற்கு விடை காணவேண்டும்.

சூலைநோய் கொண்டிருந்த நாவுக்கரசர் நள்ளிரவு அளவில் பாடலிபுத்திரத்தில் புறப்பட்டு விடிவதற்குள் திருவதிகை அடைந்ததாகத் தெரிவதால், திருவதிகையிலிருந்து பாடலி புத்திரம் 20 கி.மீ (12 மைல்) தொலைவில் இருந்திருக்கலாம் என்று முன்பு (பக்கம் - 377} கணித்தோம். மற்றும், மகேந்திர வர்மப் பல்லவன் பாடலிபுத்திரத்துப் பாழிகளையும் பள்ளி களையும் இடித்துக் கொண்டுபோய்த் திருவதிகையில் குணபரேச்சரம் என்னும் கோயில் கட்டினானென்றால், கருங்கற் பொருள்ளை நெடுங் தொலைவு இழுத்துக் கொண்டு போகாமல், 20 அல்லது 25 கி.மீ. தொலைவிலேயே சிவன் கோயில் கட்டினான் என்று கொள்ளலாம். இவ்வாறெல்லாம் தொலவைக் கணக்கிட்டுப் பார்க்கும்போது, திருவதிகைக்கு 20 அல்லது 25 கி.மீ தொலைவில் சிறப்புற்றிருந்த இடமாகவும், பாடலம் என்னும் பாதிரி மரம் நிறைந்திருந்த இடமாகவும் அறியக் கிடப்பது, கிழக்கேயுள்ள திருப்பாதிரிப் புலியூர்ப் பகுதியைத் தவிர, வேறு எந்தத் திக்கிலும் வேறு எந்த இடமும் இருந்ததாகத் தெரியவில்லை. அப்படியென்றால் பாடலி புத்திரமும் பாதிரிப் புலியூரும் ஒன்றா என்றால் இல்லையில்லை; பாதிரிப் புலியூருக்குப் பக்கத்தில் பாடலி புத்திரம் ஒரு தனிப் பகுதியாக இருந்தது என்பதுதான் உண்மை. இவ்விரண்டையும் தனித்தனி நகராகச் சேக்கிழார் குறிப்பிட்டிருப்பதை ஈண்டு நினைவுபடுத்திக் கொள்ள வேண்டும்.

ஐரோப்பாவிலிருந்து தமிழகத்திற்குக் கிறித்துவ மதத்தைப் பரப்ப வந்தவர்கள், புகழ்பெற்ற இந்துக் கோயில்கள் இருக்கும் இடத்திற்குப் பக்கத்தில் கிறித்துவக் கோயில் (சர்ச்) எழுப்ப முயன்றதும், அம்முயற்சியில் சில இடங்களில் வெற்றி பெற்றதும் சில இடங்களில் தோல்வியடைந்ததும் நாடறிந்த உண்மை. எடுத்தக்காட்டாக, - தென்னார்க்காடு மாவட்டத்தில் மயிலம் மலைமேல் உள்ள முருகன் கோயில் மிகவும் புகழ் பெற்றது. கோயில் உள்ள குன்றுக்குப் பக்கத்தில் இணைப்பாக மற்றொரு குன்று உள்ளது; அந்த வெற்றுக் குன்றில் மாதாகோயில் (சர்ச்) ஒன்று கட்டுவதற்காக ஐரோப்பியர் ஆட்சியில் கிறித்துவ மதத் தலைவர்கள் எவ்வளவோ முயன்றனராம்; முடியவில்லை. மதம் பரப்ப முயல்வோருக்கு இது வழக்கம் என்பதை அறிவிப்பதற்காக இங்கே இஃது எடுத்துக் காட்டப்பட்டது.

இதுபோலவே, பண்டு சமண சமயத்தைப் பரப்ப முயன்ற சமணர்கள், சைவசமயத்திற்குச் சிறப்பிடமாய்த் (முக்கிய