பக்கம்:கெடிலக் கரை நாகரிகம்.pdf/392

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கெடிலக்கரை ஊர்கள்

391


புதுவண்டிப்பாளையம்

இங்கே ஒரு முருகன் கோயில் உள்ளது. இந்த வட்டாரத்தில் இது மிகவும் பெயர் பெற்றது. ஞாயிறு தோறும், ஒவ்வொரு திங்களிலும் (மாதத்திலும்) - கார்த்திகை (கிருத்திகை) நாள்தோறும் இக்கோயிலில் பேய்ப் பெண்கள் பெண்களாக்கப்படுகின்றனர்; அதாவது, பேய் - பிசாசு பிடித்த பெண்கள் இங்கே வந்து பேயோட்டிக் கொண்டு செல்கின்றனர்; பில்லி - சூனியங்களாலும் தீராப் பிணிகளாலும் தாக்கப் பட்டவர்களும் இங்கே வந்து வழிபட்டு ஆறுதலும் மாறுதலும் பெற்றுச் செல்கின்றனர். இக்கோயிலின் தென்மேற்குத் திருச்சுற்றுப் பகுதியில் பேயோட்டல் நடைபெறுகிறது. வேல் ஒன்று உள்ளது; அந்த வேலின் முன்னால் இது நடைபெறும். பேயோட்டுவதற்கு என்று ஒரு ‘சாமியார் உள்ளார்; அவர், ஆடிப் பாடி அங்கலாய்க்கும் பெண்களை அமைதி பெறச் செய்கிறார்; இதைக் கொண்டு, அந்தப் பெண்களைப் பிடித்திருந்த பேய்ப் பீடை தொலைந்துவிட்டதாகப் பொருள் பண்ணிக் கொள்ள வேண்டும். பேயாட்டம் ஆடும் பெண்கள் இருக்கும் ஒவ்வொரு குடும்பத்திலும் இவரைப்போல் ஒருவர் சாமியாராக மாறினால், புது வண்டிப்பாளையம் கோயிலில் கூட்டம் சேராது. இங்கே சாமியாடிக் குறி சொல்வதும் உண்டு.

புதுவண்டிப் பாளையம் கோயில் ஐப்பசித் திங்களில் கந்தர் சஷ்டிப் பெருவிழா ஆறுநாள் நடைபெறும். சஷ்டியன்று நடைபெறும் சூரசம்மார விழா காணத்தக்கது. மற்றும், பங்குனித் திங்களில் பத்து நாள் பெருவிழா நடைபெறும். ஒன்பதாம் நாள் உத்தரத்தன்று தேர் ஒடும். ஆறாம் நாளில் திருப்பாதிரிப் புலியூர்க் கோயிலிலிருந்து பாடலேசுரர் இக் கோயிலுக்கு எழுந்தருளி, மைந்தன் முருகனுடன் ஒரு நாள் மகிழ்ச்சியாய்ப் பொழுது போக்கி விழா வயர்ந்து செல்வார்; இது மிகவும் சிறப்பாக இருக்கும். இந்தப் பங்குனி உத்தரப் பெருவிழா சில ஆண்டுகளாக நடைபெறவில்லை குளக்கரையில் நிறுத்தப்பட்டிருக்கும் தேர் மக்கிக் பாழடைந்து வருகிறது.

அப்பர் கரையேறிய சித்திரை அனுட நாளிலும் அது சார்பாகப் பெரிய விழா நடைபெறும். அன்று திருப்பாதிரிப் புலியூர்ப் பாடலேசுரரும் வண்டிப் பாளையம் முருகனும் அப்பர் கரையேறிய இடத்திற்குச் சென்று கரையேற்றுவிழா நடத்துவர். இவ்விழா பற்றிய விரிவான விளக்கத்தை, இந்நூலில் ‘வரலாறு கண்ட திசைமாற்றம்’ என்னும் தலைப்பில் காணலாம்.

வண்டிப் பாளையம் முருகன், தைத்திங்களில் ஐந்தாம் நாளிலும் இரதசப்தமியன்றும் பெண்ணையாற்றிற்கும், தை