பக்கம்:கெடிலக் கரை நாகரிகம்.pdf/399

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

398

கெடிலக்கரை நாகரிகம்


அடுத்தபடியாக, மாவட்ட நீதி மன்ற மாளிகை குறிப்பிடத்தக்கது. இது 1866இல் கட்டி முடிக்கப்பட்டது. இம் மாளிகையின் பின்புறம் ஒரு குளம் இருக்கிறது. குளத்தின் நடுவில் உருக்குலைந்த ஒரு தூபி உள்ளது. கோபுர உச்சி போன்ற இந்தப் பகுதி, எங்கோ ஒரு கோயிலிலிருந்து ‘அடித்துக் கொண்டு’ வரப்பட்டதாக இருக்க வேண்டும்.

அடுத்து, மஞ்சக்குப்பம் பகுதியில் வடகிழக்கில் உள்ள ‘கர்னல் தோட்டம்’ என்னும் பகுதி குறிப்பிடத்தக்கது. ஆங்கிலப் படைத்தலைவர் (Colonel) ஒருவர் தங்கியிருந்ததால் இது இப்பெயர் பெற்றது. ‘கர்னப் பிள்ளை தோட்டம்’ என்றும் மக்கள் இதனை அழைக்கின்றனர். இந்த இடத்தை 1852ஆம் ஆண்டில் புதுச்சேரி ரோமன் கத்தோலிக்க சபைத் துறவி பொன்னாந்த் (Mgr. Bonnand) என்பவர் விலைக்கு வாங்கினார். இதில் 1884ஆம் ஆண்டு ஓர் உயர்நிலைப்பள்ளி நிறுவப்பட்டது. இது, 1886ஆம் ஆண்டு இரண்டாந்தரக் கலைக்கல்லூரியாக உயர்த்தப் பட்டது. இதற்கு ‘செயின்ட் ஜோசப் காலேஜ்’ என்பது பெயர். இது புதுச்சேரி கடலூர் ரோமன் கத்தோலிக்கத் தலைமையகத்தால் நடத்தப்பட்டு வந்தது. 1909 ஆம் ஆண்டளவில் கல்லூரி வகுப்புக்கள் எடுபட்டு உயர்நிலைப் பள்ளி அளவில் நின்றுவிட்டது. இன்றும் இந்த உயர்நிலைப் பள்ளி நடைப்பெற்று வருகிறது. இந்தப் பகுதியில் ரோமன் கத்தோலிக்கக் கிறித்தவர்கள் மிகுதியாய் வாழ்கின்றனர். மஞ்சக் குப்பம் பகுதியில் அரசினர் ஆண்கள் ஆசிரியர் பயிற்சிப்பள்ளி ஒன்றும் உள்ளது.

மஞ்சக்குப்பத்திற்கு மேற்கே சிறிது தொலைவில் செம்மண்டலம் என்னும் இடத்தில், தொழிற் பயிற்சிப்பள்ளி (Industrial Institute), ஒன்று அரசினரால் நடத்தப் பெறுகிறது. இதையடுத்து இங்கே ‘பாலிடெக்னிக்’ - பல் தொழிற்கூடம் ஒன்று உருவாகி வருகிறது.

வில்வராய நத்தம்

இது, மஞ்சக்குப்பத்திற்கு வடக்சே - கடலூர் நகராட்சியின் வடக்கு எல்லையாக உள்ளது. வில்வராய நத்தம் என்னும் ஊர்ப் பெயர், பல்லவராயநத்தம் என்பது போல் அரசர் தொடர்பால் ஏற்பட்டதாகத் தெரிகிறது. பல்லவர் காலத்தது எனக் கருதப்படும் பழைய சிவன் கோயில் ஒன்று இங்கே உள்ளது. மத்திய அரசினரின் கரும்பு ஆராய்ச்சிப் பண்ணை இங்கே இருப்பது குறிப்பிடத்தக்கது.