பக்கம்:கெடிலக் கரை நாகரிகம்.pdf/400

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கெடிலக்கரை ஊர்கள்

399



தேவனாம் பட்டினம்

பட்டினம் என முடிந்திருப்பதிலிருந்தே இவ்வூர் கடற்கரையில் உள்ள சிற்றுார் என்பது புலனாகும். தேவநாதன் பட்டினம் அல்லது தெய்வநாயகன் பட்டினம் என்பதுதான் தேவனாம்பட்டினம் என்றாகியிருக்கவேண்டும் என்று கருதப்படுகிறது. இந்தப் பெயருடைய பெரியார் ஒருவர் முன்பு இங்கே வாழ்ந்திருப்பார் அல்லது - இந்த ஊரோடு சிறப்புத் தொடர்பு கொண்டிருந்திருப்பார்.

தேவனாம் பட்டினம், மஞ்சக் குப்பம் - புதுப்பாளையம் பகுதிக்குக் கிழக்கே கடற்கரையில் உள்ளது. இதனை ஒரு சிறு தீவு என்று சொல்லலாம். கெடிலம் கடலோடு கலக்கும் இடத்திற்கு மேற்கே சிறிது தொலைவில், கெடிலத்திலிருந்து ஒரு கிளை பிரிந்து வடக்கே சிறிது தொலைவு சென்று பிறகு மீண்டும் கிழக்கு நோக்கித் திரும்பிக் கடலோடு கலக்கிறது. கெடிலத்தின் இந்த வடகிளைப் பிரிவுக்குள் தேவனாம் பட்டினம் இருக்கிறது. அதாவது, இதன் கிழக்குப் பக்கம் கடலும், தெற்குப் பக்கம் கெடிலமும், மேற்குப் பக்கமும் வடக்குப் பக்கமும் கெடிலத்தின் வடகிளைப் பிரிவும் உள்ளன. இவ்வாறு நான்கு பக்கமும் நீர் சூழ்ந்திருப்பதால் இது ஒரு சிறு தீவு எனப்படுகிறது. இங்கே மீனவர்கள் தாம் மிகுதியாக வாழ்கின்றனர். மாசி மகத்தன்று நூற்றுக் கணக்கான இறையுருவங்கள் வந்து கடல் நீராடுவது இப்பகுதியில்தான்.

தேவனாம் பட்டினம் கடற்கரைக்குச் செல்லத் ‘தார்’ போட்ட நல்ல சாலைகள் உண்டு; கடற்கரையிலும் தார்ப் பாதை உண்டு. மாலையில் காற்று வாங்குவதற்கு ஏற்ற இடம் இது. இங்கிலாந்து நாட்டிலுள்ள “கவுண்டி பீச்” போன்ற அமைப்பு இங்கே இருப்பதாக அறிந்தவர்களால் புகழப்படுகிறது. அழகும் வசதியும் செய்து மக்களைக் கவர்ந்து இங்கே மாலைவேளைகளில் பெருங்கூட்டம் சேரும்படிச் செய்யவேண்டும் என்னும் பரந்த நோக்குடன், கடலூர் நகர் மன்றம் இங்கே 1938ஆம் ஆண்டில் மின் விளக்குகள் பொருத்திப் பூங்காவும் வைத்து அணி செய்தது. இருப்பினும் இந்தக் கடற்கரை, சென்னைக் கடற்கரையைப் போல் வளர்ச்சி பெறவில்லை. கோடையில் ஓரளவு மக்களே வந்து போகின்றனர். போதிய அளவு உள்நகர்ப் பேருந்து வண்டி (டவுன் பஸ்) வசதி செய்யப்பட்டால் பெருங்கூட்டம் சேரக்கூடும்.

தேவனாம் பட்டினம் இயற்கைச் சூழ்நிலைச் சிறப்புடன், செயின்ட் டேவிட் கோட்டையை மையமாகக் கொண்ட வரலாற்றுச் சிறப்பும் உடையதாகும்.