பக்கம்:கெடிலக் கரை நாகரிகம்.pdf/500

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



25. கெடிலக்கரை நாகரிகம்

நாகரிகம்

நாகரிகம் என்ற சொல்லுக்குப் பொருள் காண்பது அரிது; எது நாகரிகம் என்று அறுதியிட்டுக் கூறுவது அதனினும் அரிது. நகர் அடிப்படையில் நாகரிகம் பிறந்ததாக ஒரு விளக்கம் கூறப்படுகிறது. நகரங்களில் தொழில் வளமும் வாணிக வளமும் மிகுதி; அதனால் மக்கள் தொகையும் மிகுதி. நகரங்களில் பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த மக்கள் வாழ்கின்றனர். அதனால், ஒரு பிரிவினர்க்கு இன்னொரு பிரிவினர் இளைத்தவரல்லர் என்ற முறையில் ஒருவர்க்கொருவர் போட்டி போட்டுக்கொண்டு நடையுடை முதலியவற்றால் தங்களைச் சிறந்தவராகக் காட்டிக் கொள்ள முயல்கின்றனர். அதனால் வெளித்தோற்றத்திற்கு ஏதோ ஒருவகை ஆரவார ஆடம்பர அமைப்பு காணப்படுகிறது; இந்த அமைப்பையே ‘நாகரிகம்’ என்னும் சொல்லால் பலர் குறிப்பிடுகின்றனர். இதனால், நகரிலிருந்து நாகரிகம் பிறந்தது என்பதாக ஒருவகைப் பெயர்க்காரணம் கூறப்படுகிறது.

நகரங்கள் உருவானதற்கு ஆற்றுவளம் காரணம் எனச் சொல்லப்படுகிறது. ஆற்றுப்பாசன வசதியால் பல்வேறு வகைப் பொருள்கள் விளைய, அதனால் தொழில் வளமும் வாணிக வளமும் பெருக, அதனால் வாழ்க்கை வசதி உயர, அதனால் மக்கள் ஒன்றுதிரள நகரங்கள் உருவாயின; நகரங்களிலிருந்து ‘நாகரிகம்’ தோன்றிப் பரவியது - எனக் கூறப்படுகிறது.

பழைய நாகரிகங்கள்

உலகில், எகிப்திய நாகரிகம், மெசபட்டோமிய நாகரிகம், இந்தியச் சிந்துவெளி நாகரிகம் முதலிய நாகரிகங்கள் மிகவும் பழைமையானவை எனப் பாராட்டப்படுகின்றன. இவை யாவும், ஆற்றங்கரைச் செல்வத்தை அடிப்படையாகக் கொண்டு எழுந்தவையே. எகிப்திய நாகரிகம் நைல் ஆற்றையும், மெசபட்டோமிய நாகரிகம் டைக்ரீஸ் - ‘யூப்ரடிஸ்’ என்னும் இரண்டு ஆறுகளையும், சிந்து வெளி நாகரிகம் ‘சிந்து’ ஆற்றையும் அடிப்படையாகக் கொண்டவை. இவை போலவே, கெடிலக் கரை நாகரிகம் ‘கெடிலம்’ ஆற்றை அடிப்படையாகக் கொண்டு எழுந்ததாகும்.

இற்றைக்கு 8000 அல்லது 10,000 ஆண்டுகட்கு முன்பே உலகம் ஓரளவு நாகரிகம் அடைந்திருந்தது. பழைய நாகரிகங்கள்