வரலாறு கண்ட திசைமாற்றம்
65
ஆசிரியர் மூவருக்கும் பிற்பட்டவர் - பத்தாம் நூற்றாண்டினர் என்பது போதரும்.
இதற்கு இன்னும் கூரான சான்று ஒன்று கொடுக்க முடியும். நம்பியாண்டார் நம்பி என்னும் சைவப்பெரியார், தமது ‘ கோயில் திருப்பண்ணியர் விருத்தம்’ என்னும் நூலில், திருவாதவூரர் என்னும் இயற்பெயருடைய மாணிக்க வாசகரையும் அவர் அருளிய திருச்சிற்றம்பலக் கோவையையும் பற்றி,
- "வருவா சகத்தினில் முற்றுணர்ந்
- தோனைவண் தில்லைமன்னைத்
- திருவாத வூர்ச்சிவ பாத்தியன்
- செய்திருச் சிற்றம்பலப்
- பொருளார் தருதிருக் கோவைகண்
- டேயுமற் றப்பொருளைத்
- தெருளாத புள்ளத் தவர்கவி
- பாடிச் சிரிப்பிப்பரே" (58)
- பாடிச் சிரிப்பிப்பரே"
- "வருவா சகத்தினில் முற்றுணர்ந்
என்னும் பாடலில் சிறப்பித்துக் கூறியுள்ளார். நம்பியாண்டார் நம்பியின் காலம் பதினோராம் நூற்றாண்டு என்பது, அனைவரும் எளிதில் ஒப்புக்கொண்டுள்ள உண்மை. எனவே, அவருக்கும் முற்பட்டவர் மணிவாசகர் என்பது தெளிவு. ஆகவே, மணிவாசகரின் காலம் பத்தாம் நூற்றாண்டு என்பதும் தெளிவு.
மற்றொரு வகையிலும் மணிவாசகரின் காலத்தைக் குறுக்கி நெருக்கிக்கொண்டு வரலாம். பதினோராம் நூற்றாண்டினரான நம்பியாண்டார் நம்பி பட்டினத்தாரின் பாடல்களைத் தொகுத்துள்ளார். பட்டினத்தாரோ, மணிவாசகரைப் பாராட்டிப் பாடியுள்ளார். எனவே, நம்பியாண்டார் நம்பிக்கும் முற்பட்ட பட்டினத்தார்க்கும் முற்பட்டவர் மணிவாசகர் என்பது புலனாகும். ஆகவே, நம்பியாண்டார் நம்பி பதினோராம் நூற்றாண்டினரென்றால், பட்டினத்தாரின் காலம் பதினோராம நூற்றாண்டின் முற்பகுதி அல்லது பத்தாம் நூற்றாண்டின் பிற்பகுதி என்றும், மணிவாசகரின் காலம் பத்தாம் நூற்றாண்டின் முற்பகுதி என்றும் கொள்ளலாம். பத்து - பதினோராம் நூற்றாண்டுகளாகிய இருநூறு ஆண்டு காலத்தில் மூன்று தலைமுறையினர் (மணிவாசகர், பட்டினத்தார், நம்பியாண்டார் நம்பி) இருந்திருப்பதில் வியப்பேதுமில்லை; அது நடக்கக் கூடியதே.
கெ.5.