பக்கம்:கெடிலக் கரை நாகரிகம்.pdf/69

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

68

கெடிலக்கரை நாகரிகம்


யிருக்கலாம். திருப்பாதிரிப் புலியூர்க்குத் தெற்கே கெடிலம் ஓடியதாக எழுதிய தொல்காப்பியத் தேவர் காலமான சில ஆண்டுகளில் கெடிலம் திசை மாறியிருக்கலாமே! எனவே, தொல்காப்பியத் தேவர் நூற்றாண்டுக் கணக்கில் மாணிக்க வாசகர்க்கு முற்பட்டவர் என்று கூறமுடியாவிடினும், சில ஆண்டுகளாயினும் முற்பட்டவர் என்று கூறலாமே!

சிலர், வேறொரு காரணங் காட்டியும் தொல்காப்பியத் தேவரின் காலத்தைப் பின்னுக்குத் தள்ள முயலலாம். அஃதாவது, கலம்பகம், தூது, உலா முதலிய 96 வகைச் சிற்றிலக்கியங்கள் பிற்காலத்தில் தோன்றியவை; எனவே, திருப்பாதிரிப் புலியூர்க் கலம்பகம் இயற்றிய தொல்காப்பியத் தேவர் மணிவாசகருக்குப் பிற்பட்டவரே என்று கூறக்கூடும்.

கலம்பகம் போன்ற சிற்றிலக்கியங்கள் சங்க இலக்கியங்கட்குப் பிற்பட்டனவே யெனினும், ஏழாம் நூற்றாண்டிலிருந்தே இத்தகு சிற்றிலக்கியங்கள் தோன்றத் தொடங்கிவிட்டன. கலம்பக நூல்கள் ஒன்பதாம் நூற்றாண்டிலேயே தோன்றத் தொடங்கிவிட்டன என்பதும், திருப்பாதிரிப் புலியூர்க் கலம்பகம், நந்திக் கலம்பகம், ஆளுடைய பிள்ளையார் திருக்கலம்பகம் முதலிய கலம்பகங்கள் கலம்பக நூல்களுக்குள் மிகவும் பழமையானவை என்பதும் தமிழிலக்கிய ஆராய்ச்சி வல்லுநர்கள் நன்கறிந்த செய்திகளாம். ஆளுடைய பிள்ளையார் திருக்கலம்பகம் நம்பியாண்டார் நம்பி இயற்றியது. அவர் பதினோராம் நூற்றாண்டினர். எனவே, திருப்பாதிரிப் புலியூர்க் கலம்பகம் இயற்றிய தொல்காப்பியத் தேவரின் காலம் ஒன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதி அல்லது பத்தாம் நூற்றாண்டின் முற்பகுதியாய் இருக்கலாம். இவ்வகையில் பார்க்குங்கால், மணிவாசகருக்குச் சிலவாண்டுகளாயினும் முற்பட்டவர் தொல்காப்பியத்தேவர் என்று கூறமுடியுமே.

மேலும், தேவர் என்னும் பட்டப் பெயரைப் பார்க்கும் போது, இவர் சமணராயிருந்து பிறகு சைவத்திற்கு மாறினதாகத் தெரிகிறது. தேவர் என்பது சமண முனிவரைக் குறிக்கும் பெயராகும். சீவக சிந்தாமணி ஆசிரியராகிய திருத்தக்க தேவர், சூளாமணி யாசிரியராகிய தோலா மொழித்தேவர் ஆகிய சமணப் பெரியார்களின் பெயர்களை ஈண்டு ஒப்பு நோக்குக. திருத்தக்க தேவரும் தோலா மொழித் தேவரும் எட்டு அல்லது ஒன்பதாம் நூற்றாண்டினராக இருக்கலாம் எனக் கூறப்படுகின்றனர். அவர்கள் காலத்தை யொட்டியவராகத்