98
பல நூறு பேர், ஒரே பகுதியில், காவலில் வைக்கப்பட்டிருந்ததால், ஒருவருடன் ஒருவர் பழக வாய்ப்பு இருந்தது.
தோழர் சுந்தரம் எனக்குப் பல ஆண்டுகளாக நண்பர்; அன்பழகனுக்கு நெருக்கமான நண்பர்; ஆனால் சிறைபுகக்கூடியவர் என்று நான் எண்ணினதில்லை. என்னிடம் அவர் அறப்போரில் ஈடுபடப் போவதாக, மற்றவர்கள் சொன்ன போது, நான் முதலில் நம்பவில்லை. பிறகு, தடுத்தும் பார்த்தேன். இன்று, அவரிடம், சிறை செல்லும் துணிவும் விருப்பமும் எப்படிப் பெற முடிந்தது என்பதுபற்றிக் கேட்டேன். என் பங்கை நான் செலுத்த வேண்டும் என்ற உணர்வு கொண்டுதான் நான் ஈடுபட்டேன், என்று அவர் கூறினார். சிறையில், சங்கடமும், சலிப்பும், பயமும் ஏற்படவில்லையா என்று கேட்டேன். முதலில், என்னைத் தனியாக, பொன்னேரியில் கொண்டுபோய் அடைத்தார்களே, அப்போது சங்கடமாகவும், பயமாகவும் இருந்தது. நல்ல மழை. நான் இருந்த அறையிலே விளக்கும் இல்லை.பாம்பே கூட நுழைந்துவிட்டது. அப்போதுதான் பயப்பட்டேன். இங்குவந்த பிறகு, சங்கடமாகத் தோன்றவில்லை என்று கூறினார்.
இன்று மாலை, கடற்கரையில் பாராட்டுக் கூட்டம்! அதிலே கூடிடும் பெருந்திரளைக்காண்கிறேன்! மகிழ்ச்சி ஒலி காதிலே விழுகிறது! புன்னகை தவழும் முகங்களைக் காண்கிறேன்! எல்லாம் இங்கு இருந்தபடி என் வாழ்த்துக்களை வழங்கி மகிழ்கிறேன்.
நாளை இதழ்களில், செய்தி பார்த்து, மகிழ வேண்டும்.
இன்றிரவு, அத்தக் கூட்டத்திலே, 'அறிமுகம்' செய்யப்பட்டு பாராட்டுப் பெறும், மாநகராட்சி மன்ற உறுப்பினர்களை எண்ணி மகிழ்ந்தபடி, உறங்கச் செல்கிறேன்.