பக்கம்:கொங்கு நாட்டு வரலாறு.pdf/11

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

2

இது கொங்கு நாட்டின் முழு வரலாறு அன்று. சங்க காலத்துக் கொங்கு நாட்டின் வரலாறு ஆகும். கொங்கு நாட்டின் புகழூரையடுத்த மலைப்பாறையில் எழுதப்பட்ட பிராமி எழுத்துச் சாசனம், கொங்கு நாட்டை யாண்ட பெருங் கடுங்கோன், இளங் கடுங்கோன், இளங்கோன் என்னும் மூன்று அரசர்களைக் கூறுகிறது. அவர்களைப்பற்றிய வரலாறு தெரியவில்லை. நமக்குக் கிடைத்த வரையில் உள்ள சான்றுகளையெல்லாம் தொகுத்து வரன் முறையாக எழுதப்பட்ட சங்க காலத்துக் கொங்கு நாட்டுச் சரித்திரம் இது.

இவ்வாறு சங்க காலத்துக் கொங்கு நாட்டு வரலாற்றை எழுதுவதற்கு என்னென்ன சாதனங்களும் கருவிகளும் சான்றுகளும் கிடைத்திருக்கின்றனவோ (அவை மிகச் சில) அவற்றையெல்லாம் பயன்படுத்திக்கொண்டு இந்தக் கொங்கு நாட்டுப் பழைய வரலாற்றினை எழுதுகிறேன். இதைச் சரியாகச் செய்திருக்கிறேனா என்பதை வாசகர்கள் கூறவேண்டும்.

இந்த நூலை நான் எழுதுவதற்குக் காரணமாக இருந்தவருக்கு நன்றி செலுத்துகிறேன். பொள்ளாச்சிப் பெருந்தகையார் திரு. நா. மகாலிங்கம் அவர்கள், இந்நூலை எழுதுமாறு என்னைத் தூண்டி ஊக்கப்படுத்தினார்கள். அவர்களின் தூண்டுகோல் இல்லாமற் போனால் இந்நூலை நான் எழுதியிருக்க முடியாது. அவர்களுக்கு என்னுடைய நன்றியைச் செலுத்தக் கடமைப்பட்டுள்ளேன்.

இந்நூலை அழகாக அச்சிட்டு வெளியிட்ட நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பிரைவேட் லிமிடெட் நிலையத்தாருக்கு நன்றி கூறுகிறேன்.

இந்த வரலாற்று நூலைப் பொதுமக்கள் ஆதரித்து எனக்கு மேன்மேலும் ஊக்கம் அளிக்குமாறு வேண்டுகிறேன். இது போன்ற பணிகளில் என்னைச் செலுத்தித் தமிழகச் சமய வரலாறு, மொழி வரலாறு, சமுதாய வரலாறு, நுண்கலை வரலாறுகளை எழுத உதவியருள வேண்டுகிறேன்.

சென்னை -4 மயிலை சீனி வேங்கடசாமி
19-9-74