பக்கம்:கொங்கு நாட்டு வரலாறு.pdf/141

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

132

பாடிய பொய்கையாழ்வார் கிழக்குக் கடற்கரையைச் சேர்ந்த தொண்டை நாட்டில் பிறந்து பக்தி இயக்கக் காலத்தில் (பலலவ ஆட்சிக் காலத்தில்) இருந்தவர். (பக்தி இயக்கக் காலம் என்பது கி. பி. 6-ஆம் நூற்றாண்டிலிருந்து கி. பி. 10-ஆம் நூற்றாண்டு வரையில் உள்ள காலம்)

பக்தி இயக்கக் காலத்தில், ஏறத்தாழ கி. பி. 6-ஆம் நூற்றாண்டில் இருந்த பொய்கையாழ்வார் மானிடரைப் பாடாமல், விஷ்ணுவையே பாடித் தொழுது கொண்டிருந்தவர். அவர் எந்த அரசனையும் வணங்கித் துதித்துப் பாடியவர் அல்லர். ‘வாய் அவனை அல்லது வாழ்த்தாது’ என்றும் (11) “மால் அடியை அல்லால் மற்றும் எண்ணத் தான் ஆமோ” என்றும் (31) ‘நா நாளும் கோள் நாகணை யான் குரைகழலே கூறுவதே’ என்றும் (63) ‘நாடிலும் நின் அடியே நாடுவன் நாள்தோறும் பாடிலும் நின் புகழே பாடுவன்’ என்றும் (83) ‘மாயவனை அல்லால் இறையேனும் ஏத்தாது என் நா’ என்றும் (94) உறுதி கொண்டிருந்த பொய்கையாழ்வார் மனிதரைப் பாடாத திருமால் பக்தர்.

ஆனால், கடைச் சங்க காலத்தில் இருந்த பொய்கையாரோ, மனிதனாகிய செங்கட்சோழன் மேல் ‘களவழி நாற்பது’ பாடிய புலவர். மேலும் அவர், சேரமான் கோக்கோதை மார்பனையும், பொறையனையும் புகழ்ந்து பாடியுள்ளார். ‘தெறலழுந்தானைப் பொறையன் பாசறை’யைப் பாடியுள்ளார். (நற். 18) மேலும் சேரமான் கோக் கோதைமார்பனை அவர்,

“கள் நாறும்மே கானலத் தொண்டி
 அஃதெம் ஊரே, அவன் எம் இறைவன்”

(புறம் 48) (அவன்-கோதை மார்பன்)

என்றும்,