பக்கம்:கொங்கு நாட்டு வரலாறு.pdf/193

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

184

அப்போது இவர் ஒரு செய்யுளைப் பாடினார். (புறம் 206. பிறகு அதிகமான் பரிசில் வழங்கி இவரை ஆதரித்தான். அதிகமான் அஞ்சியை ஔவையார் அவ்வச் சமயங்களில் பாடியுள்ளார். அதிகமான் நெடுமான் அஞ்சிக்கு மகன்பிறந்த போது அவன் போர்க்களத்திலிருந்து வந்து மகனைப் பார்த்தான். அவ்வமயம் அவன் இருந்த காட்சியை ஔவையார் பாடியுள்ளார். கையில் வேலும் மெய்யில் வியர்வையும் காலில் வீரக்கழலும் மார்பில் அம்புதைத்த புண்ணும் உடையவனாக வெட்சிப் பூவும் வேங்கைப் பூவும் விரவித் தொடுத்த மாலையை அணிந்து கொண்டு புலியுடன் போர் செய்த யானையைப் போல அவன் காணப்பட்டான் என்று கூறுகின்றார். (புறம் 100) அவனுடைய மகன் பெயர் பொகுட் டெழினி.

அதிகமான் ஒருசமயம் ஔவையாரைத் தொண்டைமான் இளந்திரையனிடம் தூது அனுப்பினான். இவரை வரவேற்றுத் தொண்டைமான் தன்னுடைய படைக்கலச் சாலையைக் காட்டினான், போர்க் கருவிகள் எண்ணெயிடப்பட்டு மாலைகள் சூட்டி வரிசையாக வைக்கப்பட்டிருந்தன. அதுகண்ட ஒளவையார், தன்னுடைய அதிகமான் அரசனின் போர்க் கருவிகள் பழுது தீர்க்கப்படுவதற்காகக் கொல்லனுடைய உலைக்களத்தில் இருக்கின்றன என்று ஒரு செய்யுள் பாடினார், (புறம் 95. அதாவது அதிகமான் தன்னுடைய ஆயுதங்களைப் பயன்படுத்திக் கொண்டேயிருந்தபடியால் அவற்றை அவன் ஆயு சாலையில் வைக்கவில்லை என்பது கருத்து. எளிதில் கிடைக்காத அருமையான நெல்லிக்கனி நெடுமானஞ்சிக்குக் கிடைத்தது. அதனை அருந்தியவர் நெடுங்காலம் வாழ்ந்திருப்பார்கள். அந்தக் கனியை அவன் அருந்தாமல்