பக்கம்:கொங்கு நாட்டு வரலாறு.pdf/228

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

219

294-ஆம் செய்யுளைப் பாடியவர் வடம வண்ணக்கன் தாமோதரனார் குறுந்தொகை 85-ஆம் செய்யுளைப் பாடியவர். வண்ணக்கன் சோருமருங்குமரனார் என்பவர் நற்றிணை 257-ஆம் செய்யுளைப் பாடியுள்ளார். அரசலூர் மலைக் குகையில் தவஞ் செய்த முனிவருக்கு கற்படுக்கையைத் தானஞ் செய்த தேவன் சாத்தன் மணிக்கல் வண்ணக்கன்.

மணிக்கல் வண்ணக்கனான தேவன் சாத்தன் இம்மலைக் குகையில் முனிவருக்கு இடங்களைத் தானஞ் செய்ததோடு இந்தச் சாசன எழுத்துக்களையும் பொறித்தான் என்பது இதன் கருத்தாகும். எழுத்தும் புணர்த்தான் என்பதிலுள்ள உம் என்னும் இடைச்சொல், இவனே சாசன எழுத்தையும் பொறித்தான் (எழுதினான்) என்பதைக் குறிக்கிறது.

புகழியூர் (புகழூர்)

திருச்சிராப்பள்ளி மாவட்டம் கரூர் தாலுகாவில் புகழூர் இருக்கிறது. இந்த ஊர், திருச்சிராப்பள்ளி-ஈரோடு இருப்புப் பாதையில் ஒரு நிலையமாக இருக்கிறது. புகழூருக்கு இரண்டு கல் தொலைவில் வேலாயுதபாளையம், என்னும் கிராமத்துக்கு அருகில் ஆறு நாட்டார் மலை என்னும் பெயருள்ள தாழ்வான குன்றுகளில், இயற்கையாக அமைந்துள்ள குகைகள் இருக்கின்றன. இக்குகைகளின் பாறையில் கற்படுக்கைகளும் பிராமி எழுத்துக்களும் காணப்படுகின்றன. பிராமி எழுத்துகள் கி.பி. 300க்கு முற்பட்ட காலத்தில் தமிழ்நாட்டில் வழங்கி வந்தபடியால் இவை கடைச் சங்க காலத்திலே எழுப்பப்பட்டவை என்பது தெளிவாகத் தெரிகிறது. இந்த இடங்கள் கடைச் சங்க காலத்தில் கொங்கு நாட்டுப் பகுதிகளாக இருந்தவை.