பக்கம்:கொங்கு நாட்டு வரலாறு.pdf/9

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

VIII

பதிற்றுப்பத்து அரசர்களை மூத்த வழியரசர் என்றும், இளைய வழியரசர் என்றும் இரு பிரிவாகப் பிரிக்கலாம். மூத்த வழியரசர்கள் சேர நாட்டையரசாண்டார்கள். இளைய வழியரசர்கள் கொங்கு நாட்டை யரசாண்டார்கள். கொங்கு நாட்டையரசாண்ட இளைய வழியரசர்களுக்குக் கொங்குச் சேரர் என்று பெயர் கூறலாம். சங்க இலக்கியங்களில், அவர்கள் பொறையர் என்று கூறப்பட்டுள்ளனர். ஆனால், மூத்த வழி பரம்பரையாருக்கும், இளையவழி பரம்பரையாருக்கும் கொங்கு நாட்டுச் சரித்திரத்தில் பெரும் பங்கு உண்டு. மூத்த வழியைச் சேர்ந்த சேர அரசர் கொங்கு நாட்டைச் சிறிது சிறிதாகக் கைப்பற்றிச் சேர சாம்ராச்சியத்தோடு (சேர பேரரசோடு) இணைத்துக் கொள்ள பல காலம் முயன்றனர். கொங்கு நாடு சேர இராச்சியத்துக்கு அடங்கிய பிறகு, சேர அரசர்களின் இளைய பரம்பரையார் கொங்கு நாட்டில் வந்து தங்கி, கருவூரைத் தலைநகரமாக அமைத்துக் கொண்டு, கொங்குச் சேரர் என்னும் பெயர் பெற்றுக் கொங்கு நாட்டையரசாண்டார்கள். இந்த வரலாற்றையறிவதற்குப் பெருந்துணையாக இருப்பது பதிற்றுப் பத்து. முக்கியமாக 7, 8, 9 ஆம் பத்துகள் கொங்கு நாட்டுப் பழைய வரலாற்றை அறிவதற்கு உதவியாக உள்ளன.

புற நானூறு :
புற நானூறு சங்க காலத்திலிருந்த சேர, சோழ, பாண்டிய அரசர்கள் மேலும், சிற்றரசர்கள் மேலும் புலவர்கள் அவ்வப்போது பாடிய செய்யுள்களின் தொகுப்பு ஆகும். புற நானூற்றுச் செய்யுள்களில் சேர அரசரைப் பற்றிய செய்யுள்களும் உள்ளன. கொங்குச் சேரர்களைப் பற்றிப் பதிற்றுப் பத்தில் கூறப்பட்ட வரலாறுகள் சில, புற நானூற்றுச் செய்யுள்களிலும் கூறப்படுகின்றன. பதிற்றுப் பத்தில் கூறப்படாத கொங்கு நாட்டு அரசர் செய்திகளும், புற நானூற்றில் கூறப்படுகின்றன. மேலும், கொங்கு நாட்டை அக்காலத்தில் அரசாண்ட சிற்றரசர்கள் (பதிற்றுப்பத்தில் கூறப்படாதவர்) சிலர் புற நானூற்றில் கூறப்படுகின்றனர். ஆகவே, புற நானூறு கொங்கு