பக்கம்:கொல்லிமலைக் குள்ளன்.pdf/56

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மூவரும் காட்டிற்குள் புகுந்து சென்றார்கள். ஜின்கா தங்கமணியின் பக்கத்திலே நடந்து வந்தது.

“வாடா ஜின்கா, இரவெல்லாம் ஓடோடி வந்தது உனக்குக் களைப்பாய் இருக்கும்” என்று சொல்லிவிட்டுத் தங்கமணி இடத்தோளைத் தட்டினான். ஜின்கா ஒரே பாய்ச்சலில் அவன் தோள் மேல் ஏறி உட்கார்ந்துகொண்டது.

மரங்களும் செடிகளும் புதர்களுமாக அந்தக் காட்டில் அடர்ந்திருந்தன. பலவகையான கொடிகள் மரங்களில் பற்றிப் படர்ந்து தொங்கிக்கொண்டிருந்தன. அவற்றிற்கிடையே வழி உண்டாக்கிக்கொண்டு போவதே சிரமமாக இருந்தது. ஆனால், அவர்கள் விடாமுயற்சியோடு காட்டிற்குள் புகுந்து போய்க்கொண்டிருந்தார்கள்.

“எங்காவது ஒரு ஒற்றையடிப்பாதை தென்பட்டால் பிறகு அதைப் பின்பற்றியே காட்டைக் கடந்து செல்ல முயலலாம். அப்படிப் பாதையைத்தான் நான் தேடிப் போகிறேன்” என்று தனது நோக்கத்தை மற்றவர்களுக்கு விளங்குமாறு செய்து கொண்டே தங்கமணி முன்னால் சென்றான். ஆனால், அவன் எதிர்பார்த்தபடி காட்டிற்குள் பாதையொன்றும் தென்படவில்லை. ஓரிடத்திலே மரங்களுக்கிடையே ஒரு சிறிய