பக்கம்:கோடுகளும் கோலங்களும்.pdf/120

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

118

கோடுகளும் கோலங்களும்

கூரை வீடானாலும் நல்ல அகலம், வசதி, பெரிய சாணி மெழுகிய முற்றம். திண்ணையும் கூட வழுவழுவென்று மிக நன்றாக இருக்கிறது. எந்த வேலையிலும் ஒரு திருத்தமும், மெருகும் தனக்கு வரவில்லை என்பது சாந்தியின் வீட்டைப் பார்த்தால் புலனாகிறது.

“வாங்கக்கா, வாங்க. வள்ளிக்கிழங்கு வெவிச்சேன், சாப்பிடுறீங்களா?” தட்டில் நான்கு கிழங்குகளுடன் உள்ளிருந்து வெளியே வருகிறாள். நெல் புழுக்கலில் அவித்ததா?

பிள்ளைகளுக்கு டிபன்டப்பியில் வைத்து மூடுகிறாள்.

அவளுக்கும் ஆவி பறக்கும் இரண்டு கிழங்குகளைத் தட்டில் எடுத்துக் கொண்டு வருகிறாள்.

“கிளம்புங்க; மணி எட்டே கால்... பஸ் வந்திடும்..."

காலனியின் வளைவுக்கப்பால் சாலை வரை சென்று அவர்களை வழிஅனுப்புகிறாள். "பத்திரம் சுஜாம்மா, தம்பி கையப் புடிச்சிட்டு கிராஸ் பண்ணனும்; பாத்து...”

டாடா காட்டிவிட்டு வருகிறாள்.

“நெல்லு இன்னக்கி வெவிச்சியா சாந்தி?”

“ஆமாவிடிகாலம் எந்திரிச்சி ஒரு கால் மூட்ட வெவிச்சிப் போட்ட” செவந்தி கையிலெடுத்துப் பார்க்கிறாள்.

“பொன்னியா?”

“இது ஏ.டி.டி 36ன்னாங்க. கொஞ்சம் தாட்டியா இருக்கு. சோறு நல்லாருக்கும். புது நெல்லு தா...”

“சாந்தி, எனக்கு ஒண்ணுமே புடிக்கல. வெறுத்துப் போயி ஒடியாந்த எங்கூட்ல தகராறு. இத்தினி வருசமா, உளுமையா, எல்லாரும் நல்லபடியா இருக்கணும்னு உழச்சி என்ன பலன்? ஒரு ஆதரவு, ஒரு பேச்சு இல்ல.”

“அன்னைக்குக் கடன் கட்டினப்ப, வங்கிக்காரரு, ‘சந்தோசம்மா அடுத்த பயிர் வைக்கக் கடன் வாங்கலாம் நீங்க'ன்னாரு. மொத மொதல்ல நா வங்கில கேக்கலாம்னு