பக்கம்:கோடுகளும் கோலங்களும்.pdf/130

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது


14


“இத பாருங்க செவந்தி அம்மா. உங்க பேரில எங்களுக்கு நிறைய நம்பிக்கை இருக்கு. அதனாலதான் இப்ப, நீங்க ஒண்ணரை ஏக்ராவில பயிரிடப் போகும் மணிலாப் பயிருக்கான இடு பொருட்கள் எல்லாம் தந்து உதவுறோம். உங்கப்பா பேரில் நிலம் இருக்கிறது. அவரை அழைத்து வந்து, எல்லாப் ஃபாரத்திலும் ஒப்புப் போட்டுக் கொடுக்கச் சொன்னீங்க. அதில் ஒரு சிக்கலும் இல்ல... ஆனா, அதே போல, இந்த பூமிச் சொந்தக்காரர் வந்து சான்றிதழ், ஃபாரங்களில் நிரப்பி ஒப்புப் போட்டு தரணும். இப்போது நீங்களே விவசாயம் பண்ணறவங்கண்ணு தெரிஞ்சாலும் ரூல், சட்டம் ஒண்ணிருக்கு. நிலம் யார் பேரிலே இருக்குதோ அவங்க பேருக்குத்தான் குடுப்போம்....”

செவந்தி சங்கடப்பட்டு நிற்கிறாள்.

“ஒரு கால் காணிக்கு... முன்ன கொடுத்த மாதிரி கொஞ்சமா, அது கூடக் கொடுக்க மாட்டீங்களா சார்....?”

“எப்படிம்மா கொடுக்க? நீங்க உங்க புருசனக் கூட்டிட்டு வாங்க. இல்லாட்டி உங்க பேரில நிலத்த ரிஜிஸ்தர் பண்ணிக்குங்க...”

கடலைப் பயிருக்கு வேண்டிய நுண்ணூட்டச் சத்து, ஜிப்சம் எல்லாம் வாங்கி வண்டியில் அப்பாவும் கன்னியப்பனும் போய் விட்டார்கள். தைக் கடைசி. வேர்க் கடலைக்கு நடுவில் ஊடு பயிராகப் பயிறு விதைக்கவும் ஏற்பாடு செய்திருக்கிறது. மண் காய்ந்திருக்கிறது. உழவோட்டிக் கடலையை விதைத்து விட்டு நுண்ணூட்டச் சத்து மணலைக் கலந்து தூவ வேண்டும். ஆட்கள், அப்பாவும், கன்னியப்பனும், இவளும் சாந்தியும்தாம்.