பக்கம்:கோடுகளும் கோலங்களும்.pdf/145

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ராஜம் கிருஷ்ணன்

143


“ஐயா, இதுக்கு ஒரு பத்திரம் எழுதி வாங்கிக்குங்க. அப்பா நீங்க நம்ம ராமசாமிக் கிட்டச் சொல்லி ஒரு பத்திரம் எழுதிட்டு வாங்க...”

“எதுக்கம்மா? எனக்கு உம் பேரில நம்பிக்கை இருக்கு. நீ என்னை நம்பு. நீ பயிர் வைக்கணும். நல்லா வரணும். நாமெல்லாரும் சிநேகமா இருக்கணும். கஷ்ட நஷ்டம் பகிர்ந்துக்கணும்... இதுல பணம் குறுக்க வரக் கூடாது. அது ஒரு கருவி. ஒரு சாதனம். அது வாழ்க்கை இல்லம்மா... நா வரட்டுமா?”

அவர் மீசையை முறுக்கிக் கொண்டு எழுந்திருக்கிறார்.

அப்பனும் எழுந்திருக்கிறார்.

செவந்தி கையெடுத்துக் கும்பிடுகிறாள்.

குரலே எழும்பவில்லை.


16


“யக்கோ! உங்கள அவங்க கையோடக் கூட்டியாரச் சொன்னாங்க!” என்று கன்னியப்பன் வந்து நின்றான்.

அன்றாடம் இந்த வயலுக்கும் அந்த வயலுக்குமாக நடந்து கால்கள் வலிக்கின்றன. அதுவும் முதல் நாள்தான் இவர்கள் வயலில் நடவு செய்தார்கள். எட்டு பேர் நடவு. அரிசியும், வெஞ்சனமும் கொடுத்து, அத்தனை ஆட்களுக்கும் மீசைக்காரர் வீட்டிலேயே சமையல் ஏற்பாடு செய்தார்கள். சாந்திதான் உதவினாள். மீசைக்காரர் வயலில் வாரம் முன்பே நட்டு விட்டார்கள்.

அவர்களுக்கு எடுத்ததற்கெல்லாம் சந்தேகம். ஏதேனும் சிறு சந்தேகம் வந்தாலும் லட்சுமி சிட்டுக் குருவி போல் ஓடி வந்து விடுகிறாள்.