ராஜம் கிருஷ்ணன்
229
ருக்குவைப் பக்கத்தில் அழைத்து உட்கார்த்துகிறாள் அண்ணி. டீசர்ட் அணிந்த மருமகன் கை கூப்புகிறான்.
சரேலென்று அப்பா நினைவு வருகிறது.
இப்போதும் சின்னம்மா அவரைப் பார்க்காமல் போய் விடுவாளோ? அன்று மாநாட்டில் நழுவ விட்டாற் போல் நழுவ விடக் கூடாது. அவர் இலக்கில்லாமல் கூட்டத்தில் புகுந்து விரிவுரை கேட்கும் கும்பலில் ஆராய்ந்து விரிச்சிட்ட யாகசாலைப் பக்கம் துழாவி, மீண்டும் பிரசாதம் வழங்கும் இன்னோர் இடத்துக்கும் வருகிறாள். அங்கு அறிவொளி இயக்கத் தோழர்களுடன் சரோ பிரசாதம் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறாள். லலிதா, தேவிகா என்ற பெண்கள் காஞ்சியிலிருந்து வந்திருக்கிறார்கள்.
“சரோ! தாத்தா பிரசாதம் வாங்கிட்டாரா? பார்த்தாயா?”
“பார்க்கல. பாட்டிதா எந்திரிச்சி போச்சு. நா வாங்கிக் கொடுத்தேன்.”
“சின்னம்மா வந்திருக்காங்க. ருக்குவும் கூட வந்திருக்கு. அவங்க மாமாகிட்டப் பேசிட்டிருக்காங்க. அப்பாதானே பார்க்கணும்ன்னாரு.” அவளாகச் சொல்லிக் கொள்கிறாள். சரோ இதில் எந்த முக்கியத்துவமும் இருப்பதாகப் புரிந்து கொள்ளவில்லை.
சுந்தரி...தன் பிள்ளைகளுடன் பிரசாதம் வாங்கிக் கொண்டு வருகிறாள். பையன் ஒரு பாட்டிலில் தண்ணீரைக் கொண்டு வருகிறான். சாப்பிட உட்காருகிறார்கள்.
“சுந்தரி? அப்பாவப் பாத்தியா? சின்னம்மா வந்திருக்காங்க. அவர்தான் பார்க்கணும், பேசணும்னு துடிச்சிட்டிருந்தாரு?”
“அதா கிணத்தாண்ட எல்லாருக்கும் தண்ணி எறச்சிக் குடுத்திட்டிருக்காரு. இத இவ அங்கேருந்துதா வாரான். நாங் கொஞ்சம் எரச்சி ஊத்தன. எல்லாம் வெயில்ல தாகம் தாகம்னு வராங்க... பானையில் தண்ணி ஊத்தி வச்சிருந்தாங்க. காலியாயிடிச்சி. செவந்தி! சாயங்காலம் வரைக்கும் இருக்கப் போறியா? நாம வூட்டுக்குப் போயி கொஞ்சம் பாத்திட்டு